பிளாஷ்பேக் 2018: கோர்ட் தீர்ப்பினால் வெடிக்காத பட்டாசு... கருகும் 'குட்டி ஜப்பான்' தொழிலாளர்கள்
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சோதனைக்காலமான 2018ஆம் ஆண்டில் பட்டாசு த
சிவகாசி: 2018 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே சோதனையை சந்தித்து வருகின்றனர். வானில் வண்ண வண்ண ஒளிச்சிதறல்களை காட்டி வான வேடிக்கை நிகழ்த்தும் பட்டாசு அனைவரையும் குதூகலப்படுத்தும். அந்த பட்டாசுகளையும், வண்ண வண்ண மத்தாப்புகளையும் உயிரை பணயம் வைத்து உற்பத்தி செய்யும் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையோ இருளடைந்து வருகிறது. பட்டாசு வெடிக்க நிபந்தனை, உற்பத்தி செய்ய கட்டுப்பாடு என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தொழிலாளர்களின் பாதிப்பு பற்றி ஒரு பிளாஷ் பேக்.
தமிழகத்தில் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை சக்கரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிவகாசியில் 700க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் பல புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துகின்றனர்.
பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கண்டித்து, சிவகாசியிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் கோடிக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
சிவகாசிக்கு வந்த சோதனை
கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகி வருகிறது. பட்டாசு தொழிலையே பதம் பார்த்த சீன பட்டாசு வரவு, மூலப் பொருட்களின் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு இத்தகைய அடுத்தடுத்த பிரச்சனையால் சிக்கலுக்குள்ளாகியது. 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைத்திட வேண்டும் என்று உரிமையாளர்கள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
காற்று மாசுபாடு
கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஓரிரு நாட்களாவது இத்தடையை விலக்க வேண்டுமென பட்டாசு உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இத்தடை காற்று மாசுபாடு குறித்து அறிந்து கொள்ளும் சோதனை முயற்சியாகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பட்டாசு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதவடைப்பு, உண்ணாவிரதம் என பல நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது.
சோதனைக் காலமான 2018
பட்டாசு 2018ஆம் ஆண்டு தொடக்கமே பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையில் சோதனைக்காலமாக அமைந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்ததால் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பட்டாசு விற்பனையாளர்கள், லாரி உரிமையாளர்கள், காகித அட்டை தயாரிப்போர், ரசாயன மூலப் பொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட 12 சங்கங்களை சேர்ந்த 4 ஆயிரம் பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரம் மட்டுமே வெடிக்க அனுமதி
இந்தாண்டும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு தரப்பினரின் வாதங்களை கேட்ட ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அமர்வு தீபாவளி அன்றிரவு 8 மணி முதல் 10 மணி வரையில், இரண்டு மணி நேரங்கள் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மூலமாக பட்டாசுகள் விற்பதற்கும் தடை விதித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கும் பட்டாசு விற்பனைத்தடை பொருந்தும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மட்டும் இரவு 11:45 முதல் நள்ளிரவு 12:45 வரையில் ஒரு மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. 130 கோடி மக்களின் உடல்நலன் குறித்தான அக்கறையோடு, பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கணக்கில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள்
பட்டாசு உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தளர்த்த கோரி, விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இயங்கி வந்த 1070 பட்டாசு ஆலைகள் தீபாவளிக்குப் பின்னர் மூடப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெருந்திரள் போராட்டம்
பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி 21ஆம் தேதி சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டன.
காத்திருப்பு போராட்டம்
பட்டாசு தொழிலை பாதுகாக்க பட்டாசு தொழிலாளர்கள் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவினால், நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பில் மற்றும் அதன் தொடர்பான நேரடி மற்றும் மறைமுக பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க கூறி போராடினர்.
பட்டாசு புகையில் மடியும் கொசுக்கள்
பட்டாசு பயன்பாட்டினால் காற்று மாசுபடுவதாக கூறுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் அதில் இருந்து அதிகளவில் வெளியாகும் புகையால் கொசுக்கள் பெருமளவில் விரட்டப்படுகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளால் அடிக்கப்படும் கொசு மருந்து புகையை விட தீபாவளி பண்டிகைக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் புகை அளவு பன்மடங்கு அதிகம் என்பதால் இது தீவிர கொசு விரட்டியாக அமைந்து விடுகிறது. இதனால் நோய் தாக்கமும் குறைகிறது என்பது மக்களின் கருத்து. கடந்த 2004, 2006, 2016 உள்ளிட்ட ஆண்டுகளில் டெங்கு கொசு உற்பத்தி பெருமளவில் குறைந்தது என்று ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்.
இருள் விலக வேண்டும்
வறண்ட இந்த கந்தக பூமிக்கு பட்டாசு உற்பத்தியில் உலகில் 5வது இடம். ஆண்டுக்கு இங்கே மூவாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பினும், தொழிலாளர்கள் வருமானம் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. இங்குள்ள பட்டாசுத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றால் மட்டுமே கூலி என்னும் நிலையில் வாழ்க்கையை ஒட்டி வருகின்றனர். வண்ண வண்ணக் காகிதங்களைச் சுருட்டி, அதில் வெடி மருந்துக் கலவைகளை நிரப்பி, விதவிதமாய் சத்தங்களுடன் வெடிக்க வைத்து நம்மை ரசிக்கச் செய்து மகிழ்விக்கும் பட்டாசுத் தொழிலாளர்களின் நிலை தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்த மறுநாள் கேட்பாரற்று சிதறிக் கிடக்கும் காகிதச் சுருள்களை போலத்தான். இந்த வாழ்க்கையிலும் இப்போது இடி விழுந்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் காதுகளுக்கு குட்டிஜப்பான் நகரத்து மக்களின் குரல் எப்போது கேட்குமோ? மூடப்பட்ட தொழிற்சாலைகளின் கதவுகள் எப்போது திறக்குமோ.