அருண் ஜெட்லி அல்வா கிண்டிட்டார்... பட்ஜெட் அச்சடிக்க ஆரம்பிச்சிட்டாங்க
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அல்வா கிண்டி, இனிப்பு கொடுத்து அச்சகத்தில் அச்சடிக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.
டெல்லி: பிப்ரவரி 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையை பிரதி எடுக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது. பாரம்பரிய அல்வா விருந்துடன் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இதனை தொடக்கி வைத்தார்.
பட்ஜெட் ஆவணங்களை தயாரிக்கும் பணி தொடங்கும் முன், அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் அல்வா விருந்து கொடுப்பது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மரபாகும்.
பட்ஜெட் தயாரிப்பின்போது அதில் பங்கேற்கும் அலுவலர்களும், பணியாளர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போனில் கூட தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாது.
பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
2018 பட்ஜெட் கூட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தொடங்குகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை தயாரிக்கும் பணியை பாரம்பரிய அல்வா விருந்துடன் நிதி அமைச்சக அலுவலர்கள் சனிக்கிழமை தொடங்கினர்.
அருண்ஜெட்லி அல்வா
இந்த விருந்திற்காக பெரிய பாத்திரம் ஒன்றில் அல்வா தயாரிக்கப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் இந்த விருந்தில் பங்கேற்று அல்வா பாத்திரத்தை கிண்டினார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அல்வா கிண்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அல்வா விருந்துடன் ஆலோசனை
சுடச் சுட சுவையான அல்வா தயாரிக்கப்பட்டு நிதியமைச்சக ஊழியர்கள் அனைவருக்கும் அல்வா வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்துக்கொண்டு இறுதிக்கட்ட அச்சடிக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
சிறையில் சிக்கும் ஊழியர்கள்
இந்த விருந்தில் பங்கேற்ற ஊரியர்கள் அனைவரும், தங்களது வெளியுலக தொடர்பை துண்டித்துவிட்டு, பூட்டிய அறைக்குள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். பட்ஜெட் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால், குடும்பத்தினர் உள்பட யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது.
கண்காணிப்பில் ஊழியர்கள்
நிதித்துறை அலுவலர்கள் விரும்பி ஏற்கும் இந்தச் சிறையில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் அவசர காரியம் என்றால் மட்டும் குடும்பத்தாருடன் தொலைபேசி யில் ஸ்பீக்கரில் மட்டுமே பேச முடியும். சில நேரங்களில் ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு போலீஸாரின் கண்காணிப்பில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். நிதி அமைச்சக ஊழியர்கள் இந்த சிறையை இதனை விரும்பியே ஏற்கின்றனர்.