3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி கடும் சரிவு... காரணம் என்ன? - ஓர் அலசல்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லி: உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்க எதிரொலியால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் 5.7% அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை எல்லாவற்றிற்கும் மொத்தமாக சேர்த்து வைத்து செய்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது
ஆம். சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது ராக்கெட் வேகத்தில் உயரும் என்று டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து டீ குடிப்பவர்கள் முதல் புள்ளியியல் புலிகள் முதல் ஏகத்திற்கு சவால் விட்டார்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
கூடவே, இந்த நிதி ஆண்டின் முதல் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய காலாண்டு என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், இவர்களின் எதிர்பார்ப்பை கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய புள்ளி விவரம் பொய்த்துப் போக வைத்துள்ளது.
ஜிடிபி 5.7 சதவிகிதம்
மத்திய புள்ளியியல் துறையானது இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளி விவிரத்தை (GDP) வெளியிட்டது. அதில் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாது கடந்த மூன்றறை ஆண்டுகளில் இல்லாத அளவான 5.7 சதவிகிதம் என்ற அளவை எட்டியது மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அதிக எதிர்பார்ப்புகள்
இந்த ஆண்டில் பருவ மழையானது சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என்பதால், விவசாய உற்பத்தி அமோகமாக இருக்கும் என்றும், மேலும் கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக தொழில்துறையின் உற்பத்தி வெகு சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பான ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய காலாண்டு என்பதால் மத்திய அரசு மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தது. ஏனென்றால், ஜிஎஸ்டிக்கு முந்தைய கால கட்டமான ஜூன் மாதம் வரையிலும் வாட் வரி விதிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, கலால் வரி விதிப்பு மற்றும் ஆயத்தீர்வை போன்ற காரணங்களினால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவை எட்ட முடியவில்லை.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் உற்பத்திச் செலவு குறையும் என்றும் இலாபம் அதிகரிக்கும் என்ற காரணத்தை முன்மொழிந்தே மத்திய அரசானது இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையினை கொண்டுவந்தது.
ஆனால், அதே சமயத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுமானால் உள்நாட்டு உற்பத்தி குறையும், விலைவாசி உயரும் என்று சில பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை
ஏனென்றால், உற்பத்தி துறையில் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலப்பொருட்களை வாங்கவும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தையும் பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள் ரொக்க நடவடிக்கையையே பின்பற்றுகின்றன. ஆனால், உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு மத்திய அரசானது ரொக்க நடவடிக்கையை குறைத்து மின்னணு பணப்பரிவரித்தனையை ஊக்குவித்துவருகிறது.
மின்னணு பணப்பரிவர்த்தனை
இதனால், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுத்தப்பட்ட பின்பு ரொக்க நடவடிக்கை மேற்கொள்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என்று முன்னரே எதிர்பார்த்து, பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ரொக்க நடவடிக்கையை தவிர்த்து வந்தனர். மேலும், தொழில்நிறுவனங்கள் தங்களின் நடவடிக்கைகளை மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவதில் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன.
கடும் சரிவு
அதுபோலவே விவசாய விளைபொருட்கள் வாங்குவதற்கும் பெரும்பாலானவர்கள் ரொக்க முறையையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு விவசாய விளைபொருட்கள் மற்றம் உரங்கள் வாங்குவதில் சிரமங்களை ஏற்பட்டன. இதனால், விவசாய உற்பத்தியும் சரிவை சந்தித்தன. இதனாலும், ஜூன் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவை சந்திக்க நேர்ந்தது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மத்திய அரசு அதிர்ச்சி
கடந்த நிதி ஆண்டில் (2016-17) இதே காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 7.9 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 5.7 சதவிகிதம் என்று சரிந்து மத்திய அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நீண்ட பயணம்
அதுபோலவே கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் 6.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இவை எல்லாம் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பீதியில் இருந்து தொழில் துறையினர் இன்னும் விடுபடவில்லை என்று தெரிகிறது.
இதன்மூலம், பொருளாதார வளர்ச்சியில் 8 சதவிகிதம் என்ற மேஜிக் எண்ணை தொடுவதற்கு இன்னும் நீண்ட நெடிய பயணம் செல்லவேண்டும் என்பது தெரிகிறது.
ஸ்திரதன்மையற்ற பொருளாதாரம்
இதில் மற்றொரு சோகமான விஷயம் என்னவென்றால், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மிக மோசமான காலாண்டு வளர்ச்சியாகும். இதற்கு முன்பு கடந்த 2013-14ம் நிதி ஆண்டில்தான் பொருளாதார வளர்ச்சியானது 5 சதவிகிதம் என்ற மிக மோசமான அளவை எட்டியது. இதற்கு அப்போது நிலவிய மிக மோசமான லஞ்ச ஊழல் மோசடிகள், நிச்சயமற்ற அரசியல் சூழல்கள், உலகளாவிய ஸ்திரத்தன்மையற்ற பொருளாதார சூழ்நிலைகளும் காரணங்களாக அமைந்திருந்தன.
சீனா முதலிடம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. இந்த நிலைமை கடந்த 2016 டிசம்பர் வரையில்தான் நீடித்தது. ஆனால் 2017 ஜனவரி முதல் ஜூன் வரையிலான இரண்டு காலாண்டுகளாக இந்தியாவை ஓரம்கட்டி விட்டு சீனா மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது.
மந்தநிலைக்கு வாய்ப்பில்லை
மத்திய அரசு தரப்பில் இதுபற்றி கூறும்போது, புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறும்போது, அதன் தாக்கும் அதற்கு முந்தைய காலாண்டில் எதிரொலிப்பது சகஜம் என்றும், ஆனாலும் நாட்டில் ஒருபோதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே ஜிடிபி சரிவுக்குக் காரணம் என பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்