2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.2%!
டெல்லி: 2018-19ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டம்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 8.2 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு காலாண்டுகளில் இதுதான் அதிகபட்ச ஜிடிபி வளர்ச்சி விகிதமாகும்.
முதல் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது 8.2 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2017-18ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 5.8 சதவீதமாக மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சியில் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதை இதை உறுதிப்படுத்தியுள்ளது. 2வது இடத்தில் உள்ள சீனா இதே காலகட்டத்தில் 6.7 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தையே கொண்டிருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சியானது 6.8 சதவீதமாக இருந்தது. அதேசமயம் இதே காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது 7.7 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் தென்படும் சாதகமான மாற்றங்களே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவின் தொழில் உற்பத்திக் குறியீடானது 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 5.2 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 1.9 சதவீதமாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.