பணமதிப்பு நீக்கமும்... மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியும்!
கடந்த 2016-2017 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவிகிதமாக சரிந்துள்ளது.
டெல்லி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவிகிதமாக சரிந்துள்ளது.
கருப்பு பணம், கள்ள பணம் நடமாட்டத்தை தடுக்க மத்திய அரசு நவம்பர் 8ஆம் தேதி 1000, 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது.
இது கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய நிதி ஆண்டின் 4வது காலாண்டில் 7.9%-ஆக இருந்த வளர்ச்சி விகிதம் 6.1%மாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் அடிப்படையான 8 துறைகளின் வளர்ச்சி விகிதம் ஏப்ரல் மாதத்தில் 2.5%ஆக சரிந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
கடந்த 2014-15 மற்றும் 2015-16ம் நிதி ஆண்டுகளின் வளர்ச்சி மறுமதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 2014-15ஆம் நிதி ஆண்டின் வளர்ச்சி 7.2 சதவீதத்தில் இருந்து 7.5%மாக உயர்த்தபட்டிருக்கிறது. அதே போல 2015-16ஆம் நிதி ஆண்டின் வளர்ச்சி 7.9%மாக இருந்து 8%மாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
சீனாவை விட சரிந்த இந்திய ஜிடிபி
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கடந்த 2016-17 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதுவரை உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தது. ஆனால் மார்ச் காலாண்டு வளர்ச்சியால் இந்தியா அந்த இடத்தை இழந்துவிட்டது. சீனாவின் மார்ச் காலாண்டு வளர்ச்சி 6.9 சதவீதமாகும்.
ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம்
கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் (2016-17) ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.1% மாக இருக்கிறது.
தனி நபர் வருமானம் சரிவு
அந்த அறிக்கையில் இந்தியாவின் தனிநபர் வருவாய் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 5.7 % (ரூ.82,296) என்று கூறப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 6.8 சதவிகிதமாக இருந்தது.
கட்டுமானத்துறை வீழ்ச்சி
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளினால் 4ஆவது காலாண்டில் கட்டுமானத் துறை 3.7 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் 3.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருந்தது. அடிப்படையான 8 துறைகளின் வளர்ச்சி விகிதம் ஏப்ரல் மாதத்தில் 2.5%மாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 8 துறைகளில் வளர்ச்சி விகிதம் 8.7% மாக இருந்தது.
வளர்ச்சியடைந்த துறைகள்
கடந்த நிதி ஆண்டில் உற்பத்தித் துறையில் 7.9% வளர்ச்சி இருக்கிறது. வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவைகள் 7.8% அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. விவசாயம் 4.9% வளர்ச்சி அடைந்திருக்கிறது. சுரங்கத்துறை 1.8% வளர்ச்சி அடைந்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் அடுத்த வாரம் நாணய கொள்கைக் குழுக் கூட்டத்தை அரசு நடத்தவுள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி ரிசர்வ் வங்கிக்குச் சற்று அழுத்தத்தைக் கொடுக்கும் என்று கூறியுள்ளது.
உலக வங்கி கணிப்பு
2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும். இது 2020ஆம் ஆண்டில் 7.7 சதவிகிதத்தை எட்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது சற்றே ஆறுதலான செய்தியாக உள்ளது.