தங்கப்பத்திரத்திட்டம் வெற்றியா? தோல்வியா? - மக்களிடம் விழிப்புணர்வு இல்லையா?
தங்கத்தை நகைகளாக சேமிக்கும் மக்கள் மத்தியில் மத்திய அரசின் தங்கப்பத்திரத்திட்டம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: இந்திய பெண்களுக்கு தங்கத்தை நகைகளாக சேமிப்பது ஒரு மதிப்பு. விழாக்காலங்களில் நகைகளை கழுத்தில் அணிந்து செல்வது ஒரு பெருமிதம். மத்திய அரசின் தங்கப்பத்திர சேமிப்புத் திட்டம் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்களிடம் போதிய வரவேற்பினை பெறவில்லை என்றே கூற வேண்டும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தங்கப்பத்திரத்திட்டம் அறிமுகமாகி 3 ஆண்டுகளாகியும் மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. தங்க நகைகளை வாங்கும் மக்களின் மத்தியில் தங்கப்பத்திர திட்டம் அதிக அளவில் வரவேற்பினை பெறவில்லை என்றே கூற வேண்டும்.
சவரன் தங்க பத்திர திட்டத்தில் குறைந்தது 1 கிராம் முதல் முதலீட்டினை செய்ய முடியும். ஒருவர் ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். நேரடி தங்கத்தினை எப்படி கிராம் கணக்கில் வாங்க முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திர திட்டத்திலும் முதலீடுகளைச் செய்ய முடியும். தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்றவாறு இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தின் மதிப்பும் லாபம் அளிக்கும்.
மத்திய அரசால் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கப்பத்திரம் திட்டத்தில் ஒரு கிராமுக்கு ரூபாய் 3146 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், பங்கு வர்த்தனை மையங்கள், அஞ்சல் அலுவலகங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அக்டோபர் 15ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி 2019 வரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சவரன் தங்க பத்திரத்தினை மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.நேரடி தங்கத்தினை எப்படி கிராம் கணக்கில் வாங்க முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திர திட்டத்திலும் முதலீடுகளைச் செய்ய முடியும். தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்றவாறு இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தின் மதிப்பும் லாபம் அளிக்கும். ஆனால் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கும் பணிபுரியும் பெண்களுக்கும் தங்கப்பத்திரத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை.
மாத சம்பளத்தில் மிச்சம் பிடித்து நகைகளாகவே வாங்க விரும்புகின்றனர். நகைக்கடைகளில் சீட்டுக்களாக போடுகின்றனர். நகையை வாங்கி வீட்டிலேயே வைத்திருப்பதால் அது வருமான வரிக்கணக்கில் வருவதில்லை. அதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 2.5 என நிர்ணயித்து சேமிப்பு திட்டமாக மக்களிடத்தில் கொண்டு வந்துள்ளது.
நகைகளை வீட்டில் வைத்துக்கொண்டு திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும் போது அவற்றை அணிந்து கொள்ளவே பெண்கள் விரும்புவர். அதனை விடுத்து , நகைகளை அடகும் வைக்காமல், அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்தாமல் வங்கிகளிலும், அஞ்சல் அலுவலகங்களிலும் சேர்த்து வைக்க யார் விரும்புவர்
டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வருமான வரியை அதிகப்படுத்தவும், மொத்தத்தில் அரசுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய இந்த தங்கப்பத்திர திட்டம் மக்களிடம் போதியளவில் வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை.
தங்கத்திற்கான தேவையை குறைத்து உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்தின் அடுத்தகட்டமாக டிசம்பரில் தங்கப்பத்திர விநியோகம் நடக்கவுள்ளது. ஆனால், இந்த தங்கப்பத்திர விநியோகத்தை பற்றியும், சேமிப்பின் தேவை பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதே கள ஆய்வில் தெரிய வரும் உண்மையாகும்.
அகமதாபாத் ஐஐஎம் மற்றும் ஐஎப்எம்ஆர் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 5 பேர் மட்டுமே தங்க பத்திர திட்டம் பற்றி அறிந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், தங்க அடமான திட்டம், தங்க காசு விற்பனை குறித்தும் இவர்களுக்கு தெரியவில்லை. திட்டம் அறிமுகம் செய்து 3 ஆண்டுக்கு மேல் ஆகியும் மக்களை இந்த திட்டங்கள் ஈர்க்கவில்லை. இந்த பத்திரங்களை வைத்து வங்கிகளில் தங்க அடமான கடன் வாங்கலாம். இதுபற்றி வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.