இந்தியாவில் தங்கம், நகைகளின் தேவை 8 சதவிகிதம் சரிவு
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 8 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. தங்கத்தைப் போலவே நகைகளுக்கான தேவையும் 8 சதவிகிதம் குறைந்துள்ளது.
டெல்லி: ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 8 சதவிகிதம் குறைந்து 187 டன்னாக இருந்துள்ளது. இதே காலகட்டத்தில் தங்க நகைகளுக்கான தேவை 161 டன்னிலிருந்து 148 டன்னாகக் குறைந்துள்ளது.
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது. இந்தியர்கள் தங்கத்தை புனிதமான பொருளாக மதிப்பதுடன், வருங்காலத்திற்கு ஏற்ற நல்ல முதலீடாகவும் மக்கள் கருதுகின்றனர். இதனால்தான், இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தேவை அதிகமாக உள்ளது. அதுவும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் சென்ற ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 8 சதவிகிதம் குறைந்து 187 டன்னாக இருந்துள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் தங்கத்துக்கான தேவை 202 டன்னாக இருந்தது. அப்போது ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பாக மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கியதால் அதற்கான விற்பனையும் தேவையும் அதிகமாக இருந்தது.
தங்கத்தைப் போலவே நகைகளுக்கான தேவையும் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது மேற்கூறிய காலகட்டத்தில் தங்க நகைகளுக்கான தேவை 161 டன்னிலிருந்து 148 டன்னாகக் குறைந்துள்ளது.
முதலீடுகள் சார்ந்த தங்கத்துக்கான தேவையும் 42 டன்னிலிருந்து 39 டன்னாகக் குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை கூறுகிறது. மதிப்பு அடிப்படையில், தங்கத்துக்கான தேவை ரூ.52,750 கோடியிலிருந்து ரூ.52,692 கோடியாகக் குறைந்துள்ளது. எனினும், ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 29.6 டன்னிலிருந்து 32 டன்னாக அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதலே தங்கம் சார்ந்த வர்த்தகத்தில் பல்வேறு வெளிப்படைத்தன்மை சார்ந்த நடவடிக்கைகளால்தான் குறுகிய கால அடிப்படையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் அமைப்பின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.