தங்கத்தின் தேவை அதிகரிப்பு... இறக்குமதி இருமடங்காக உயர்வு
2017-18ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) தங்கம் இறக்குமதியின் மதிப்பு இருமடங்காக அதிகரித்து 16.95 பில்லியன் டாலராக உள்ளது என்று வர்த்தக அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லி: நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்தது. அதே போல 2017-18ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) தங்கம் இறக்குமதியின் மதிப்பு இருமடங்காக அதிகரித்து 16.95 பில்லியன் டாலராக உள்ளது
உலக அளவில் தங்கம் அதிகம் இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இங்கு, தங்க கட்டிகளை விட, ஆபரண தங்க விற்பனையே முதலிடம் பிடிக்கிறது. இந்தியர்கள் நகை வாங்குவது அழகு பார்க்க மட்டுமல்ல. அடகு வைக்கவும்தான்.
அவசர தேவைக்கு பணம் புரட்ட முடியும் என்பதால், தங்கத்தின் மீதான முதலீடு இந்தியர்களிடையே அதி முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது
தங்க நகை உற்பத்தி
உலகளவில் தங்கம் நுகர்வில் சீனா முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. நகை உற்பத்தித் தொழிலின் தேவைக்காகவே பெரும்பாலும் இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது தங்கம் இறக்குமதிக்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
முதல் காலாண்டில் தங்கம் இறக்குமதி
முதல் காலாண்டில் பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் அதிகம் இருந்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. இதனால் மொத்தம் 1,125 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு இதே காலாண்டில் 490 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.
தங்கம் இறக்குமதி இருமடங்கு
2017-18ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) தங்கம் இறக்குமதியின் மதிப்பு இருமடங்காக அதிகரித்து 16.95 பில்லியன் டாலராக உள்ளது. 2016-17ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதியின் மதிப்பு 6.88 பில்லியன் டாலராக இருந்தது.
188 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 188 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டு 111 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை கால தங்கம் விற்பனை
நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதியின் மதிப்பு 5 சதவிகிதம் சரிவடைந்து 1.71 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதியின் மதிப்பு 1.80 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியா தங்கம்
இருப்பினும், இம்மாதத்தில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால் தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்து வருவதால், தங்கத்தின் இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
வர்த்தகப் பற்றாக்குறை
தங்கம் இறக்குமதி அதிகரிப்பினால் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 5.08 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியில் கடந்த மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 1.88 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டில் 7.7 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.