2019ல் தங்கம் விலை தாறுமாறாக குறையும் - ஷேர்மார்கெட்டில் சென்செக்ஸ் 44000 புள்ளிகளை எட்டும்
2019ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. தங்கம் விலை எப்படியிருக்கும் கூடுமா? குறையுமா? பங்குச்சந்தை உச்சத்தை தொடுமா அல்லது சரியுமா என்று பார்க்கலாம்.
Recommended Video
சென்னை: 2019ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 44000 புள்ளிகளைத் தொடும் என்று மோர்கன் ஸ்டேன்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை குறையும் என்று நிபுணர்களும், பஞ்சாங்கமும் கணித்துள்ளது. பஞ்சாங்கம் கணிப்பும், நிபுணர்கள் கணிப்பும் பொய்யாகாமல் பலிக்குமா என பார்க்கலாம்.
இந்தியா மக்களின் மிகப்பெரிய முதலீடு தங்கம். நடுத்தர மக்களும், ஏழைகளும் குருவி சேர்ப்பது போல ஒவ்வொரு சவரனாக சேர்க்கின்றனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள், பங்குச்சந்தை பற்றி விபரம் அறிந்தவர்கள் பங்குகளை வாங்கி விற்கின்றனர். பெண்களின் மிக முக்கியமான சேமிப்பே தங்கம்தான். மஞ்சள் உலோகத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளனர் தமிழக பெண்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் தங்கம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். 2017ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் ஒரு சவரன் 22 ஆயிரம் ரூபாயை கடந்தது. ஓராண்டில் ஒரு சவரன் தங்கம் ரூ. 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பத்துகிராம் தங்கம் ரூ. 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இன்றைக்கு நடுத்தர வயது ஆண்களும் இன்றைய இளைய தலைமுறையினரும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பல பெண்கள் காய்கறி வாங்க மார்க்கெட் போய்விட்டு வந்து சமைத்து வீட்டு வேலைகளை கவனித்த பின்னர் ஷேர்மார்க்கெட் பக்கம் கவனம் செலுத்தி படு ஈஸியாக பணத்தை அள்ளி வருகின்றனர். சென்செக்ஸ் ஆண்டு துவக்கத்தில் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் தடுமாறி சரிந்து தற்போது 35,800 புள்ளிகளை எட்டியுள்ளது. 2019ல் தங்கம் வாங்கலாமா? பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா என்று யோசிப்பவர்களுக்காக இந்த கட்டுரை படியுங்கள்.
10 கிராம் தங்கம் ரூ. 50
எங்க காலத்துல எல்லாம் ஒரு பவுன் 50 ரூபாய் இருந்தது என்று பாட்டி சொல்வதை கேட்டிருப்போம். நம் பாட்டி காலத்தில் அதாவது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னர் 1942ஆம் ஆண்டு பத்து கிராம் தங்கம் 44 ரூபாய் ஆக இருந்தது.
10 கிராம் தங்கம் ரூ. 102
நம் அம்மா காலத்தில் 1967 ஆம் ஆண்டு பத்து கிராம் தங்கம் 102 ரூபாய்க்கு விற்பனையானது படிப்படியாக உயர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் தங்கம் ஆயிரம் ரூபாயை எட்டியது. 1996ஆம் ஆண்டு 5 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கம் இரண்டாண்டுகளில் அதாவது 1998ஆம் ஆண்டு சடசடவென சரிந்து 4 ஆயிரம் ரூபாயை தொட்டது.
எகிறும் தங்கம் விலை
ஆண்டுக்காண்டு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 2008ஆம் ஆண்டு 12,500 ரூபாயாக விற்பனையான தங்கம் 2018ஆம் ஆண்டு இப்போது 30 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
2019 ஆகஸ்ட்டில் இறங்கும் தங்கம்
2019ஆம் புத்தாண்டில் தங்கம் விலை எப்படியிருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விலை உச்சத்தை தொடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். விலை சிறிது சிறிதாக குறைந்து ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை குறையும் இது 19 மாதங்களில் இல்லாத விலையாக இருக்கும் என்று பஞ்சாங்கத்திலும் கணித்துள்ளனர் வல்லுனர்களும் கணித்துள்ளனர். ஆண்டு இறுதியில் தங்கம் விலை சீராக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.
காளை, கரடி ஆட்டம்
பங்குச்சந்தை பற்றி அறிந்தவர்கள் சந்தையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பற்றி தெரிந்து கொண்டு நிதானமாக முதலீடு செய்வார்கள். 1990ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளை தொட்டது. 2000 ஆம் ஆண்டு சென்செக்ஸ் 6000 புள்ளிகளைக் கடந்தது. 2006ஆம் ஆண்டு 10 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது. 2007 ஆம் ஆண்டு சென்செக்ஸ் 15000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. அதே ஆண்டின் இறுதியில் சென்செக்ஸ் 20000 புள்ளிகளை தொட்டு முதலீட்டாளர்களின் வயிற்றில் பாலை வார்த்தது.
காளையின் ஆட்டம்
பத்தாண்டுகளில் பங்குச்சந்தையில் காளையும் கரடியும் மாறி மாறி ஆடினாலும் ஒரே சீராக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. 2018ஆம் ஆண்டு ஜனவரியில் சென்செக்ஸ் 35000 புள்ளிகளை கடந்தது. படிப்படியாக உயர்ந்து வருட மத்தியில் 38000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. அதே நேரம் நிப்டி 11500 புள்ளிகளைத் கடந்தது. இந்த ஆண்டு ஏற்ற இறக்கங்களுடன் ஆட்டம் காட்டிய மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் கரடியின் கை ஓங்கியது. ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 35800 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 10800 புள்ளிகளாக உள்ளது.
உச்சத்தை எட்டும் பங்குச்சந்தை
2018 ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை. பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணத்தை அள்ளலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். பஞ்சாங்கத்தின் கணிப்பும் அப்படித்தான் உள்ளது. வரும் ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை விலை சீராக உயரும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே நேரத்தில் சென்செக்ஸ் 44000 புள்ளிகளைத் தொடும் என்று மோர்கன் ஸ்டேன்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் கணிப்பும், நிபுணர்கள் கணிப்பும் பொய்யாகாமல் பலிக்குமா பார்க்கலாம்.