அமெரிக்கா பெடரல் வங்கி வட்டி விகிதம் உயர்வு எதிரொலி.... 1 பவுன் தங்கம் விலை ரூ18,904
டெல்லி: அமெரிக்காவின் மத்திய வங்கியான பெட்ரல் வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியான இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக சரியத் தொடங்கியுள்ளது. இன்று 1 பவுன் தங்கத்தின் விலை ரூ18,904ஆக குறைந்தது. இது மேலும் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2007-09ஆம் ஆண்டு காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது அமெரிக்கா. தற்போது அந்நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமையன்று அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசவ் வங்கி வட்டி விகிதத்தை 0.25% அதிகரித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேனட் எல்லன், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மிதமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த ஆண்டு இது இன்னமும் வேகமாக இருக்கிறது. வட்டி விகித உயர்வின் காரணமாக வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
(சென்னையில் இன்றைய தங்கம் விலை.. )
2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் அமெரிக்காவின் பெட்ரல் வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதமானது இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை. வழக்கம் போல 300 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில்தான் பங்கு சந்தை இருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, சர்வதேச பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய பங்குச் சந்தை இருப்பதால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.
இதேபோல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவில் வட்டி விகித உயர்வானது, நமது பங்குச் சந்தைகளில் கடும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும் என்று கருதவில்லை எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பெடரல் வட்டி விகிதம் உயர்வால் கச்சா எண்ணெய் விலை மிகவும் கணிசமாக சரிய வாய்ப்புள்ளது; இருப்பினும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப் போவதும் இல்லை.
(சென்னையில் இன்றைய தங்கம் விலை..)
பெட்ரல் வட்டி விகிதம் உயர்வால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் சரிய தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலையானது நேற்றைவிட இன்று கணிசமாக குறைந்து 1 பவுன் தங்கத்தின் விலை ரூ18,904.00 ஆக உள்ளது. நேற்று 1 பவுன் தங்கத்தின் விலை ரூ19,112.00 ஆக இருந்தது.
மேலும் இந்த வட்டி விகிதம் உயர்வானது ஏற்றுமதி துறையினருக்கு குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள், வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு கல்வி போன்றவை கணிசமாக அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.