தங்கம் விலை அதிரடி உயர்வு...தங்கத்தின் தேவை மந்தமாகும் - உலக தங்க கவுன்சில்
இந்த ஆண்டில் இந்தியாவின் தங்கத்துக்கான தேவை மந்தமாகவே இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணம் அதிக விலை உயர்வுதான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து 10 கிராம் சொக்கத் தங்கம் ரூ. 32,650க்கு விற்பனையாகிறது. கடந்த 2012, நவம்பர் மாதத்தின்போது 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ. 32,940ஆக இருந்தது.
விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டில் இந்தியாவின் தங்கத்துக்கான தேவை மந்தமாகவே இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளில் போனஸ் வாங்கியவர்கள் அதை தங்கத்தில் முதலீடு செய்வார்கள். வேறு சிலர் புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவார்கள். அதற்கேற்ப நகைக்கடை, துணிக்கடை, வீட்டு உபயோகப் பொருட்களின் விளம்பரங்கள் களைகட்டும். இப்போது ஆன்லைனில் அதிகம் விற்பனையாவதால் மக்கள் பலரும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கி விட்டனர்.
தீபாவளிப் பண்டிகை இன்னும் இரு தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தன திரயோதசி நாளில் தங்கம் வாங்குவது பலரது வழக்கம். எனினும் தங்கத்தின் விலை உயர்வு மக்களின் மத்தியில் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் 10 கிராம் தங்கம் ரூ. 32,650க்கு விற்பனை செய்யப்பட்டதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய விரும்புவதால் தங்கத்திற்கான தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது.
டெல்லியில் 99.99 சதவீத தங்கத்தின் விலை ரூ. 32,650ஆகவும், 99.95 சதவீத சொக்கத் தங்கத்தின் விலை ரூ. 32,500 ஆகவும் உள்ளது.
எனினும் 8 கிராம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ரூ. 24,900க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. செவ்வாயன்று ரூ. 70 உயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 32,650ஆக இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்து உள்ளது. கடந்த 2012, நவம்பர் மாதத்தின்போது 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ. 32,940ஆக இருந்தது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 39,200 க்கு விற்பனையாகிறது.
இதனிடையே இந்தியாவுக்கான தங்கம் பயன்பாடு குறித்த மதிப்பீட்டை உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற ஆண்டில் இந்தியாவின் தங்கம் பயன்பாடு 771 டன்னாக இருந்ததாகவும், இந்த ஆண்டில் சற்றுக் குறைந்து 700 டன்னாக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு காரணமாகவே அதன் தேவை குறைந்து வருவதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தங்கத்துக்கான தேவை 524 டன்னாக இருந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் தங்கத்தின் தேவை 529 டன்னாக இருந்தது. எனினும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் தங்கத்துக்கான தேவை 189 டன்னாக உயர்ந்திருக்கிறது.
இது சென்ற ஆண்டைவிட 10 சதவிகிதம் கூடுதலாகும். செப்டம்பர் காலாண்டில் நகைகளுக்கான தேவை 10 சதவிகிதம் உயர்ந்து 149 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில், நகைகளுக்கான தேவை ரூ.40,690 கோடியாகவும், ஒட்டுமொத்த தங்கத்துக்கான தேவை ரூ.50,090 கோடியாகவும் இருந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம், தசரா மற்றும் தீபாவளிப் பண்டிகை சமயங்களில் தங்கத்துக்கான தேவை எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஆனால் அதிக விலை காரணமாகவும், சில மாநிலங்களில் தேர்தல் காரணமாக வர்த்தக பாதிப்பு ஏற்பட்டதாலும் தங்கத்துக்கான தேவை சற்று குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாகத் தங்கத்துக்கான தேவை 700 டன் முதல் 800 டன் வரையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.