நடுத்தர வர்க்கத்தின் மீது மற்றொரு அடி.. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்தது மத்திய அரசு
டெல்லி: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து, மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது மத்திய அரசு.
2016 ஏப்ரல் முதல் காலாண்டுக்கு ஒருமுறை சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த காலாண்டுக்கான வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிபிஎப் சேமிப்பு மற்றும் தேசிய சேமிப்பு சர்டிபிகேட் (என்எஸ்சி) ஆகியவற்றுக்கான வட்டி, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இனி இந்த சேமிப்புகளுக்கு 7.6 சதவீதம் வட்டிதான் வழங்கப்படும்.
கிசான் விகாஸ் பத்ரங்களுக்கும் இதேபோல வட்டி குறைக்கப்பட்டு, 7.3 சதவீதமாக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட எதிர்கால செலவுகளுக்காக பெற்றோரால் சேமித்து வைக்கப்படும் சுகன்ய சம்ருத்தி (செல்வமகள் சேமிப்பு) திட்டத்திற்கும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
அதிக வட்டி விகிதம் தரப்படும் என மோடி அரசு வந்தபோது அறிவிப்பு வெளியிட்டதால் இந்த திட்டத்தில் பெண் பிள்ளைகளை பெற்ற மக்கள் அதிக அளவுக்கு இணைந்தனர். ஆனால் கடந்த முறை வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இம்முறையும் வட்டி 0.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 8.3% வட்டியில் இருந்து, இது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8.3 சதவீதம் என்ற அளவிலேயே தொடருகிறது. அதில் மாற்றம் செய்யப்படவில்லை.