வங்கிகளில் வாராக்கடன் ரூ.2.41 லட்சம் கோடி வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கம்
கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.2.41 லட்சம் கோடி வாராக்கடன்கள், வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் கூறியுள்ளார்.
டெல்லி: கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ.2.41 லட்சம் கோடி வாராக்கடன்கள் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாலும், கடன் வாங்கியவர்கள் இந்த தொகையை செலுத்தியாக வேண்டும். பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாலும் இது தள்ளுபடி அல்ல என நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரசாத் சுக்லா தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளதார்.
கடன்களை வசூலிக்கும் பணி பல கட்டங்களாக நடந்து வருகிறது. அதனால் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கம் செய்வதினால் கடன் வாங்கியவர்களுக்கு எந்த பலனும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இது போல வாராக்கடன்களை வரவு செலவு கணக்கில் இருந்து நீக்குவது வழக்கமான நடவடிக்கை. அதே சமயத்தில் இந்த நீக்கம் குறித்த முழுமையான பட்டியல் வெளியிட முடியாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் இதற்கு அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் முடிவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்திருக்கிறார்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்திய வங்கித்துறையின் வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி 21 பொதுத்துறை வங்கிகளில் 8.26 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடன் இருக்கிறது. இந்த வங்கிகள் வழங்கியுள்ள கடனில் இது 15.8 சதவீதமாகும்.
கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, அரசு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், அதை செலுத்தாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 ஆயிரத்து 63 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் 1.66 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர்.
இவர்கள் மூலம் அரசு வங்கிகளின் வாராக்கடன் ஏறக்குறைய ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடியாக அதிகரித்துவிட்டது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடனை திரும்ப வசூலிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு கேள்வியில் கடந்த 2016-ம்ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 287 கோடியை தள்ளுபடி செய்துள்ளன.