அமெரிக்காவின் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்கள் - கிரீன் கார்டு எப்போ கிடைக்கும்?
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கிரீன் கார்டு’க்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டினரில் 77 சதவீதம் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 3 லட்சத்து 6 ஆயிரத்து 601 பேர் இந்தியர்கள் விண்ணப்பித்து விட்டு காத்துள்ளதாக அமெரிக்க குடியுரிமைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் வரை கிரீன் கார்டுக்கு விண்ணிப்பித்துள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 25 பேராகும்.
அமெரிக்காவில் செட்டிலாகவேண்டும் என்ற கனவோடு பலரும் எச்1பி விசா பெற்று வேலைக்கு செல்கின்றனர். அமெரிக்காவில் தங்கி பணியாற்றுபவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெறுவோர், 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி அங்கு பணியாற்றலாம்.
அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து பணியமர்த்திக்கொள்ள இந்த எச்1பி விசாவை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. எச் 1 பி விசாவிற்கும் ட்ரம்ப் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
குடியுரிமைக்காக காத்திருப்பு
கடந்த மே மாதம் வரை கிரீன் கார்டுக்கு விண்ணிப்பித்துள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 25 பேர். இவர்களில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 601 பேர் இந்தியர்கள் என அமெரிக்க குடியுரிமைத்துறை தெரிவித்துள்ளது. 2வது இடத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். 67 ஆயிரத்து 31 சீனர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருக்கின்றனர்.
வெளிநாட்டினர் ஆர்வம்
இவர்களைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் 10 ஆயிரத்துக்கும் கீழ்தான் உள்ளனர். எல்சால்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள் 7,252 பேரும், கவுதமாலாவைச் சேர்ந்த 6,027 பேரும், ஹோண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த 5,402 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 1,491 பேரும், வியட்நாமைச் சேர்ந்த 521 பேரும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
25 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்
இந்த கணக்குப்படி பார்த்தால் எச்1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுவோர் கிரீன் கார்டு பெற 70 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் தற்போதுள்ள விதிமுறைப்படி இந்தியாவைச் சேர்ந்த திறமை வாய்ந்த தொழிலாளர்கள் கிரீன் கார்டு பெற 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கூறுகிறது அமெரிக்காவின் குடியுரிமைத்துறை அலுவலகம்
அமெரிக்கா குடியுரிமை
அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்றுவதற்கு கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த கிரீன் கார்டை பெறுவதற்காக தொழில்நுட்பத் துறையினர், மருத்துவர்கள் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடும் போட்டி இருப்பதால் கிரீன் கார்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். வெளிநாட்டினர் பலருக்கும் கிரீன் கார்டு எளிதாக கிடைப்பதில்லை. கிரீன் கார்டு கிடைப்பதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகிறது. அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்பிடி ஒரு நிதியாண்டில், ஒரு நாட்டுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையிலேயே கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.
.