2018 அரையாண்டு நேரடி வரி வசூல் ரூ. 5.47 லட்சம் கோடி
2018 செப்டம்பர் வரையிலான நேரடி வரிவசூல் மொத்தம் ரூ. 5.47 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்த வசூலைவிட 16.7 சதவிகிதம் அதிகமாகும்.
டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 16.7 சதவீதம் உயர்ந்து 5.47 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிதி பற்றாகுறை அதிகரித்து வரும் நிலையில், மொத்த நேரடி நிதி வசூல் கடந்தாண்டை விட 16.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் சுமார் 1.03 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட வேண்டிய நிதி எனவும், இது போக நிகர வரியின் மதிப்பு, 4.44 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 11.50 லட்சம் கோடி ரூபாயை நேரடி வரியாக வசூலிக்க நிதியறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த 2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டில் வசூல் செய்யப்பட்டுள்ள நிகர வரி இந்த இலக்கில் 38.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டில், 9.80 லட்சம் கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைக்காட்டிலும் நடப்பாண்டிற்கான இலக்கு 14.7 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டியே செலுத்தப்படும் வரியாக ரூ. 2.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலத்தைவிட 18.7 சதவிகிதம் அதிகமாகும்.