ஜிஎஸ்டி வரி வசூல் டிசம்பரில் ரூ.94,726 கோடியாக சரிவு!- ஒரு லட்சம் கோடி இலக்கை எட்டுமா?
2018 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் 94,726 ரூபாயாகச் சரிவடைந்துள்ளது. இதுவே 2018 நவம்பர் மாதம் 97,637 கோடி ரூபாயாக இருந்தது.
டெல்லி: 2018ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.94,726 கோடியாகச் சரிந்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.16,442 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,459 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.47,936 கோடியும் வசூலாகியுள்ளது.
2018 டிசம்பர் 31ஆம் தேதி வரை 72.44 லட்சம் விற்பனை வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் - செப்டம்பர் இடையிலான மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு 11,922 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
வாட் வரி விதிப்பில் வரி இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த வரி விகிதங்களாக இருந்த பொருட்களுக்கு எல்லாம் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையும் உயரும் என்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் வாட் வரி விதிப்பில் இருந்தது போல், வரி விகிதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்தனர். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் அனைவரி கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தும் பூஜ்ஜியம் சதவிகிதமாகவும் மாற்றி உத்தரவிட்டார்.
2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோலவே ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரியானது 1,03,458 கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்தது. ஆனால் டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் சரிவடைந்துள்ளது.
டிசம்பரில் ரூ. 94,726 கோடி வசூல்
மத்திய நிதியமைச்சகம் ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘2018ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.94,726 கோடியாகச் சரிந்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.16,442 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,459 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.47,936 கோடியும் வசூலாகியுள்ளது. அதுமட்டுமின்றி செஸ் வரி ரூ.7,888 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 72.44 லட்சம் பேர் டிசம்பர் 30 வரையில் ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்துள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் - செப்டம்பர் இழப்பீடு
முந்தைய நவம்பர் மாதத்தில் ரூ.97,637 கோடி வசூலாகியிருந்த நிலையில் அதைவிடக் குறைவாகவே டிசம்பரில் வசூலாகியுள்ளது. 2018ஆம் ஆண்டின் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களுக்கான மாநிலங்களின் இழப்பீட்டுத் தொகையாக ரூ.11,922 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும் நிதியமைச்சகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
வரி வருவாய் எவ்வளவு
டிசம்பர் மாதத்துக்கான மத்திய ஜிஎஸ்டியில் ரூ.18,409 கோடியும், மாநில ஜிஎஸ்டியில் ரூ.14,793 கோடியும் செட்டில் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாத செட்டில்மென்ட்டுக்குப் பிறகு மத்திய அரசு ரூ.43,851 கோடியும், மாநில அரசுகள் ரூ.46,252 கோடியும் வரி வருவாய் ஈட்டியுள்ளன என்றும் நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஜிஎஸ்டி வசூல்
ஏப்ரல் மாதம் ரூ.1.03 லட்சம் கோடி, மே மாதம் ரூ.94,016 கோடி, ஜூன் மாதம் ரூ.95,610 கோடி, ஜூலை மாதம் ரூ.96,483 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.93,960 கோடி, செப்டம்பர் மாதம் ரூ.94,442 கோடி, அக்டோபர் மாதம் ரூ.100,710 கோடி, நவம்பர் மாதம் ரூ.97,637 கோடி, டிசம்பரில் ரூ. 94,726 கோடி வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு
வசூலான 94,726 கோடி ரூபாய் ஜிஎஸ்டியில் மத்திய ஜிஎஸ்டி 16,442 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 22,459 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 47,936 கோடி ரூபாய், செஸ் 7,888 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டியில் ரூ.1 லட்சம் கோடி இலக்கை எட்ட வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசுக்கு டிசம்பர் மாத வரி வசூல் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஜனவரி 1 முதல் 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளதால் இந்த மாதமும் வசூல் குறைய வாய்ப்புள்ளது.