செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 92,150 கோடி.. ஜூலையை விட குறைவுதான்
டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதி மாதமான செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூலானது 92,150 கோடி ரூபாயை எட்டினாலும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைந்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு மாதாந்திர கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு பயன்பாட்டு வரி மற்றும் நிகர வரியை செலுத்துவதற்கான படிவங்களை கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் தான் ஜிஎஸ்டி ஆணையம் இறுதி வடிவம் கொடுத்து ஜிஎஸ்டிஎன் இணைய தளத்தில் அறிமுகப்படுத்தியது.
ஜூன் மாதம் வரையிலும் இருந்த வாட் வரி விதிப்பு முறை படிவத்திலிருந்து ஜிஎஸ்டி வரி படிவங்கள் முற்றிலும் மாறுபட்டு இருந்தாலும், மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல, கடந்த பத்து வருடங்களாக வாட் வரிவிதிப்பு படிவங்களையே பார்த்து வந்த வர்த்தகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் முதலில் அனைத்து விதமான ஜிஎஸ்டி படிவங்களும் ஒரே விதமான படிவங்களாகவே தெரிந்தன. இதனால் ஆரம்பத்தில் சற்று குழம்பி மந்த கதியில் செயல்பட்டனர்.
கூடவே, ஜிஎஸ்டிஎன் இணையதளமும் தொழில்நுட்ப காரணங்களால் அடிக்கடி மக்கர் செய்ததால், ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தங்களின் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரியை செலுத்துவதற்கான ஜிஎஸடிஆர்-3பி படிவத்தையும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தின் வாயிலாக செலுத்திவருகின்றனர்.
ஜிஎஸ்டிஎன் ஆணையமும் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரின் இன்னல்களை புரிந்துகொண்டு ஜூலை மாதத்திற்கான படிவங்களையும் வரியையும் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 20ம் தேதி வரையிலும் நீட்டிப்பு செய்தது.
வர்த்தகர்களும் தொழில்துறையினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களின் மாதாந்திர படிவங்களை விரைவாக செலுத்தத் தொடங்கினர். இதனால் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட முதல் மாதமான ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி வரி வசூலானது 95,000 கோடியை தொட்டு சாதனை படைத்தது. இருந்தாலும் இந்த வரி வசூலிலிருந்து முந்தைய மாதங்களுக்கான உள்ளீட்டு வரிப்பயன்பாடாக சுமார் 64000 கோடி ரூபாயை திரும்ப எடுத்துக்கொண்டது தனிக்கதை.
இரண்டாவது மாதமான கடந்த ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூலானது 91,000 கோடியை தொட்டாலும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 4000 கோடி ரூபாய் குறைவாகும். இருந்தாலும் உள்ளீட்டு வரிப்பயன்பாடு சற்று குறைவாகவே இருந்தது.
தற்போது இந்த நிதி ஆண்டின் ஆறாவது மற்றும் ஜிஎஸ்டிஎன் வரி வசூலிப்பின் மூன்றாவது மாதமான செப்டம்பர் மாதத்தின் வரி வசூல் பற்றிய புள்ளி விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்திற்கான வரி வசூலானது கடந்த அக்டோபர் 23ம் தேதி வரையிலும் சுமார் 92,150 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
இதில் மத்திய (CGST) வரியாக சுமார் 14,042 கோடி ரூபாயும். மாநில (SGST) வரியாக சுமார் 21,172 கோடி ரூபாயும். மற்றும் ஒருங்கிணைந்த (IGST) வரியாக சுமார் 48,948 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது வாயிலாக வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இறக்குமதியின் மூலமாக சுமார் 23,951 கோடி ரூபாயும், ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 7,988 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வரி வசூலானது சுமார் 43லட்சம் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை தாக்கல் செய்ததன் வாயிலாக வசூலிக்கப்பட்டது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.