சிமெண்ட் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டால் ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு - பியூஸ் கோயல்
கடந்த முறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 88 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் வரி குறைப்பு அறிவிப்பு எதுவும் இல்லை என்பதால் வர்த்தகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
டெல்லி: சிமென்ட்டுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டால் ஓராண்டுக்கு ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், வரிக் குறைப்பு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென்று பியூஷ் கோயல் பரிந்துரைத்துள்ளார்.
ஜூலை 21ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 88க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. கடந்த 13 மாதங்களாக சுமார் 400 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ.70,000 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமென்ட்டுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டது.
சிமென்ட்டுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டால் ஓராண்டுக்கு ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், வரிக் குறைப்பு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென்று பியூஷ் கோயல் பரிந்துரைத்துள்ளார்.
ஜூன் காலாண்டில் ஜிஎஸ்டி வரி வசூலில் ரூ.43,000 கோடி குறைந்துள்ளதாக மேற்கு வங்க நிதியமைச்சரான அமித் மித்ரா மதிப்பிட்டுள்ளார். இந்தக் காலத்தில் ரூ.2.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டாம் அரையாண்டில் பண்டிகைக் காலத்தையொட்டி வரி வசூல் அதிகரித்துள்ளது.
இதனிடையே டிஜிட்டல் பரிவர்த்தனையை கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் மாநில அரசுகள் ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன்படி, ரூபே டெபிட் கார்டுகள், பீம் செயலிகள் மற்றும் பீம் போன்ற யுபிஐ முறையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஜிஎஸ்டியில் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான ஒப்புதல் கவுன்சில் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை தானாக முன்வந்து செயல்படுத்த வேண்டும். இதற்காக ஜிஎஸ்டி அமைப்பு மற்றும் தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் ஆகியவை விரைவில் ஒரு மென்பொருளை உருவாக்கும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், ரூபே கார்டுகள், பீம் செயலி மற்றும் யுபிஐ அடிப்படையிலான பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஜிஎஸ்டி தொகையில் 20 சதவீதம் கேஷ்பேக் சலுகையாக வழங்கப்படும்.
இந்த வகையில் அதிகப்பட்சமாக 100 கேஷ்பேக் சலுகை பெறலாம். ரூபே டெபிட்கார்டு, பீம் செயலி, ஆதார், யுபிஐ மற்றும் யுஎஸ்எஸ்டி பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஏழை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தானாக முன்வந்து இந்த திட்டத்தில் பங்கேற்கும் மாநிலங்களில் கேஷ்பேக் செயல்படுத்த மென்பொருள் உருவாக்கப்படும். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
இதனிடையே இந்த திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது. இதில், மேற்கண்ட கேஷ்பேக் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்கள், தங்கள் வருவாயை பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பவில்லை என தெரிகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தமிழகத்தின் கோரிக்கைகளை கூட்ட ஆலோசனையின் போது வலியுறுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து மாநில அமைச்சர்களை கொண்டு புதிய குழு அமைக்கப்பட உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என அந்தக்குழு ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 88 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் வரி குறைப்பு அறிவிப்பு எதுவும் இல்லை. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது.