ஜிஎஸ்டி... சிகரெட் மீது கூடுதல் வரி... - விலை கூடுமா? குறையுமா? குழப்பமா இருக்கே!
சிகரெட் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரி விதிப்பு ஜிஎஸ்டிக்கு முந்தைய வரியை விட குறைவு என்றும் சில்லரை விலையில் விலை உயராது என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி: சிகரெட் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சிகரெட் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு ஜிஎஸ்டிக்கு முந்தைய வரியை விட குறைவு என்றும் சில்லரை விலையில் விலை உயராது என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் அவசர கூட்டத்தில் சிகரெட் மீதான வரி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, சிகரெட் மீதான வரியை உயர்த்தியுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.5,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவித்தார்.
28 சதவிகித வரி
கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வகைப்படுத்தியபோது, சிகரெட் 28 சதவீதத்துக்குள் சேர்க்கப்பட்டது.
இதில், 5 சதவீத செஸ் வரி மற்றும் ஆயிரம் சிகரெட்களுக்கான நிலையான வரியாக 65 மி.மீ.க்கு குறைவான பில்டர் மற்றும் பில்லர் அல்லாத சிகரெட்களுக்கு ரூ.1,591 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நள்ளிரவு முதல் அமல்
65 மி.மீ.க்கு மேல் நீளமுள்ள சிகரெட்களுக்கு ரூ.2,126 முதல் ரூ.4,170 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய முடிவின்படி, இந்த நிலையான வரியில் தற்போது ரூ.485 முதல் ரூ.792 வரை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
ரூ. 5000 கோடி கூடுதல் வருவாய்
புதிய வரி விதிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சிகரெட் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
விலை உயராது
இந்த வரி விதிப்பு ஜிஎஸ்டிக்கு முந்தைய வரியை விட குறைவு. எனவே சில்லரை விலையில் சிகரெட் விலை உயராது. நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை மட்டுமே குறைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைப்பார்களா?
பழைய வரியை விட குறைவு என்பதால், சிகரெட் உற்பத்தியாளர் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளித்து விலையை குறைக்கலாம். இது அவர்களின் முடிவுக்கு உட்பட்டது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் சிகரெட் விலை சில்லறை விலையில் குறையுமா என்பதே கேள்வி.