ஜிஎஸ்டி - வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்ற தயாராகிறது ஜிஎஸ்டி ஆணையம்
ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதில் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி ஆணையம் தயாராகி வருகிறது.
டெல்லி: ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதில் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி ஆணையம் தயாராகிவருவது வரி ஏய்ப்பவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது.
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், வர்த்தகர்களும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை முழுமையாக புரிந்துகொள்ளாமலேயே போட்டி போட்டுக்கொண்டு தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் தாக்கல் செய்தனர்.
ஜிஎஸ்டியில் முறையாக பதிவு செய்தவர்களில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரிமுறைகளைப் பற்றி புரியாமல் ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்ததால் ஜிஎஸ்டி வரி வருவாயும் அதிகரித்தது.
ஜிஎஸ்டி வரி வருவாய்
ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஓரளவு புரிந்துகொண்டு தங்களின் மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்ததால் பின்பு வந்த மாதங்களின் ஜிஎஸ்டி வரி வருவாயும் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூலானது 94000 கோடி ரூபாயை எட்டியது.
வரி வருவாய் குறைந்தது
தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஓரளவு தெளிவாக புரிந்துகொண்டு மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்ததன் விளைவாக ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்து தற்போது பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் 85000 கோடி ரூபாயாக சரிந்தது.
வரி வருவாய் குறைந்தது ஏன்?
ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததை ஆராய்ந்த ஜிஎஸ்டி ஆணையம், வரி வருவாய் குறைவதற்கான காரணத்தை ஆராய்ந்தது. இதன்மூலம் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டனுக்கும் இறுதி ரிட்டனுக்கும் இடையில் வரி வருவாயில் வேறுபாடு இருப்பதை கண்டறிந்தது.
ஆணையம் கிடுக்கிப் பிடி
ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததை அடுத்து, ஜிஎஸ்டி ஆணையம் வரி ஏய்ப்பு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த செவ்வாய்க் கிழமை முதல் தன்னுடைய தேடுதல் வேட்டையை தொடங்கியது. இது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்னர், முதன்முறையாக நடத்தப்படும் விசாரணயாகும். நாடு முழுவதும் முழுவதும் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் கிட்டத்தட்ட 440 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிரடி ரெய்டு
முதல் கட்ட விசாரணையில் இரும்பு மற்றும் கப்பல் போக்குவரத்து துறை சார்ந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது சுமார் 125 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 110 தொழில் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து உடனடியாக 49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று ஜிஸ்டி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெய்டு தொடரும்
ஜிஎஸ்டி கவுன்சிலின் புலன் விசாரணையில் சென்னையிலும் வரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் கணிசமாக இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சிலின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது பற்றி விளக்கம் அளித்த ஜிஎஸ்டி கவுன்சில் உயர் அதிகாரிகள், இது ஆரம்பகட்ட விசாரணையே. இது மேலும் தொடர்ந்து நடக்கும் என்றும், வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.