2018-19 ஏப்ரல்-அக்டோபரில் ரூ.38,896 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு - லோக்சபாவில் தகவல்
2018-19 நிதியாண்டில் ஏப்ரல்-அக்டோபர் காலக்கட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு மட்டும் ரூ.38,896 கோடி மதிப்புக்கு நடைபெற்றுள்ளதாக லோக்சபாவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 6585 வழக்குகளில் இ
டெல்லி: 2018-19 நிதியாண்டில் ஏப்ரல்-அக்டோபர் காலக்கட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு மட்டும் ரூ.38,896 கோடி மதிப்புக்கு நடைபெற்றுள்ளதாக லோக்சபாவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கலால் வரி சுமார் 398 வழக்குகளில் ரூ.3,028 கோடி ஏய்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேவை வரி ஏய்ப்பு சுமார் 3,922 கேஸ்களில் ரூ.26,108.43கோடிக்கு நடைபெற்றுள்ளது தெரியவந்தது.
நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஒரு ஆண்டு முடிந்து 2ஆம் ஆண்டு நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும், ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தாமல் போலி பில்களை காட்டி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். ஜிஎஸ்டி சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் அவ்வப்போது அதிரடிச் சோதனை நடத்தி வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
அது குறித்து மாநிலம் வாரிய நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குறித்து லோக்சபாவில் கடந்த வாரம் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா பதில் அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடுமுழுவதும் 3 ஆயிரத்து 196 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 766.85 கோடியாகும். இதில் 2 ஆயிரத்து 634 வழக்குகளில் ரூ.7 ஆயிரத்து 909.96 கோடி மீட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ரூ.3 ஆயிரத்து 898.72 கோடிக்கும், உத்தரப்பிரதேசத்தில் ரூ.998.62 கோடிக்கும், கர்நாடக மாநிலத்தில் ரூ.844.17 கோடிக்கும், குஜராத் மாநிலத்தில் ரூ.548.16 கோடிக்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளது.
போலி இன்வாய்ஸ்கள்
அதில் நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 148 ஜிஎஸ்டி வரிஏய்ப்புகள் நடந்துள்ளது, இவற்றின் மதிப்பு ரூ.757.34 கோடியாகும். இதில் 101 வழக்குகளில் ரூ.426.47 கோடியை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சென்னையில் போலியான இன்வாய்ஸ்களை ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் அளித்து முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவன இயக்குநர்கள் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், தமிழக அரசு கேபிள்டிவி கழகத்துக்கு செட்டாப் பாக்ஸ்களை சப்ளை செய்து வரும் கோவையில் உள்ள மந்த்ரா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது கடந்த ஜூலை மாதம் வரி ஏய்ப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 38,895 கோடி வரி ஏய்ப்பு
மத்திய நிதி இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா நேற்று லோக்சபாவில் தெரிவிக்கையில், 2018-19 நிதியாண்டில் ஏப்ரல்-அக்டோபர் காலக்கட்டத்தில் சேவை மற்றும் சரக்கு வரியான ஜிஎஸ்டி சுமார் 6,585 கேஸ்களில் ரூ.38,895.97 கோடி கண்டறியப்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
கலால்வரி ஏய்ப்பு
மத்திய கலால் வரி சுமார் 398 கேஸ்களில் ரூ.3,028 கோடி ஏய்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேவை வரி ஏய்ப்பு சுமார் 3,922 கேஸ்களில் ரூ.26,108.43கோடிக்கு நடைபெற்றுள்ளது தெரியவந்தது. சுமார் 12,711 சந்தர்ப்பங்களில் சுங்க வரி ஏய்ப்பு ரூ.6,966.04 கோடி என கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியம்
7 மாதக் காலக்கட்டத்தில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ரூ.9,480 கோடியை மீண்டும் வரிவசூல் செய்துள்ளது. சேவை வரி ஏய்ப்பில் ரூ.3,188 கோடி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கலால் வரி ஏய்ப்பில் ரூ.383.5 கோடியும், சேவை வரியில் ரூ.1600.84 கோடியும் ஏய்ப்பிலிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது என்று சுக்லா தெரிவித்துள்ளார். எத்தனை சட்டம் போட்டு வரிகளை வசூலித்தாலும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் ஏய்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.