ஜிஎஸ்டி வரி அதிகம் - சிறு குறு தொழில் நிறுவனங்களில் விற்பனை கடும் சரிவு
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு முடிவடைந்த நிலையில் வரி வசூல் அதிகரித்திருந்தாலும் சிறு தொழில்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே லாபத்தை கண்டுள்ளன. இதற்கு மாறாக சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் விற்பனையில் கடும் சரிவையே சந்தித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பல முனை வரிகளான விற்பனை வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி மற்றும் இன்ன பிற வரிமுறைகளால் தான் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்பதால், இவற்றை முற்றிலும் ஒழித்துவிட்டு அதற்கு பதிலாக ஒரே வரி முறை இருந்தால் நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் பெரும் என்ற எதிர்பார்ப்பில் கொண்டுவரப்பட்டதுதான் ஜிஎஸ்டி என்னு சரக்கு மற்றும் சேவை வரி முறை.
ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விகிதமும், பொருளுக்கான விலையும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே சீரான விலையில் இருக்கும் என்றும், இதன் முழு பயனையும் நுகர்வோர் அடையமுடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இதனால் தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்படுவதை தன்னம்பிக்கையுடனும், மிகுந்த ஆவலுடம் எதிர்பார்த்தனர்.
வர்த்தகர்களும் தொழில் துறையினரும் எதிர்பார்த்ததுபோலவே, கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்படும்போது 5%, 12%, 18% மற்றும் 28% சதவிகிதம் என நான்கு கட்ட வரிகளாகவும், தங்கத்திற்கு 3% எனவும் வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.
வாட் வரி விதிப்பு முறையில் குறைந்த பட்ச வரி விகிதமாகவும், முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி முறையில் 12 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 28 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் அதிருப்தியை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தினர்.அதிகபட்ச வரி விகித முறையால் தங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.
மத்திய நிதி அமைச்சரும், ஜிஎஸ்டி கவுன்சில் தலைவருமான அருண் ஜெட்லியும் தொழில்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்து பின்னர் நடைபெற்ற மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கான வரியை குறைந்த பட்ச வரிகளாக மாற்றி உத்தரவிட்டார்.
வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரிக்கும் என்று வர்த்தகர்களும் தொழில் துறையினரும் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்பவே மாதாந்திர ஜிஎஸ்டி வரியும் கணிசமாக அதிகரித்தவண்ணம் இருந்தது. ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்ததால் மத்திய அரசும் ஜிஎஸ்டி ஆணையமும் மகிழ்ச்சியடைந்தன.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே ஓரளவு விற்பனையில் எதிர்பார்த்த அளவு விற்பனையும் லாபத்தையும் கண்டன. இதற்கு மாறாக சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் விற்பனையில் கடும் சரிவையே சந்தித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
விற்பனை சரிவிற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வரி விகிமே காரணம் என் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வாட் வரி விதிப்பு முறையில் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி முறையில் 18 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் என அதிகபட்ச வரி விதிக்கப்ட்டதால் தங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாக சிறு தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வட மாநிலத்தில் பயன்படுத்தும் கோதுமை, அரிசி மாவு அரைக்கும் 'ஆட்டா சக்கி’ கிரைண்டருக்கு ஜிஎஸ்டியில் 5 சதவிகிதம் வரி உள்ளது. தமிழகத்தில் பயன்படுத்தும் இட்லி, தோசை மாவுக்கான வெட் கிரைண்டருக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால், வட மாநில அட்டா சக்கி கிரைண்டர்கள் தமிழகத்தில் அதிகம் விற்பனையாகின்றன. கோவை வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் 28 சதவிகித வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும், என்று கோரி வருகின்றனர். இதற்கிடையில் இந்த ஆண்டு கோவை வெட்கிரைண்டருக்கான வரி 12 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே நேரத்தில், வட மாநிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சப்பாத்தி, பூரிக்கு தேவையான துமை மற்றும் அரிசி மாவு அரைக்கும் ஆட்டா சக்கி கிரைண்டருக்கும் ஜிஎஸ்டியில் 28 சதவிகிதம் விதிக்கப்பட்டது. வட மாநில மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இதன் மீதான வரியை 5 சதவிகிதமாக நிர்ணயித்தனர். கோவையின் வெட்கிரைண்டர் உற்பத்தியும், விற்பனையும் 10 சதவீதம் குறைந்துள்ளது என்பது உற்பத்தியாளர்களின் கவலையாகும்.