பெட்ரோல், டீசலுக்கு 28% ஜிஎஸ்டி... கூடவே வாட் வரியும் - எப்படி விலை குறையும்?
பெட்ரோல், டீசலுக்கு 28 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்தாலும் வாட் வரியும் உண்டு என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Recommended Video
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவந்தால் அதிகபட்ச வரியான 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுடன், மாநில அரசுகளும் விற்பனை வரி அல்லது வாட் வரி விதிக்கக்கூடும் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதால் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 19 ரூபாய் 48பைசா ஒரு லிட்டர் டீசல் மீது 15 ரூபாய் 33 பைசா மத்திய அரசால் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. இது தவிர பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகளும் வாட் வரியை விதிக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் பாதி அளவு மத்திய, மாநில அரசுகளின் வரியாகவே உள்ளது.
குறைந்தபட்சமாக அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 6 சதவிகித விற்பனை வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோலை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மும்பையில் 39.12 சதவிகித விற்பனை வரியும், டீசலை பொறுத்தவரையில் தெலுங்கானாவில் அதிகபட்சமாக 26 சதவிகித விற்பனை வரியும் விதிக்கப்படுகிறது. பெட்ரோலின் விலையில் 45-50 சதவிகிதம் வரியாகவும், டீசலின் விலையில் 35-40 சதவிகிதம் வரியாகவும் உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது எரிபொருள் விலை உயர்வுக்கு தீர்வாக அமையும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் 28 சதவிகித ஜிஎஸ்டியுடன் சேர்த்து மாநில அரசாங்கங்கள் கூடுதல் விற்பனை வரி விதிக்குமேயானால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி தற்பொழுது அமலில் உள்ள வரிக்கு இணையாகவே இருக்கும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கர்நாடக தேர்தலுக்காக விலை உயர்வை நிறுத்தி வைத்த எண்ணெய் நிறுவனங்கள், அதன்பிறகு லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் வரை உயர்த்தின. மதிப்புக் கூட்டு வரியுடன் அதிகபட்ச ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் அது தற்பொழுதுள்ள வரிக்கு இணையாக இருக்கும் எனத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமையான இன்று காலை 6 மணிக்கு பெட்ரோல்,டீசல் விலை பற்றி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.89 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.44 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 5 பைசா குறைந்துள்ளது. டீசல் விலையில் மாற்றமில்லை. இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். தமிழகத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் விலை மாற்றம் இருக்கும்.
கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்தது. அதாவது கலால் வரியில் ஒரு ரூபாய் குறைத்தால் கூட அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டாலும் விலை குறைய வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. உலகில், எந்த நாடும், பெட்ரோல், டீசலுக்கு, ஜிஎஸ்டி மட்டும் விதிப்பதில்லை. அதோடு வாட் வரியும் விதிக்கிறது. என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைக்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 1க்கு முன்னர் எவ்வளவு வரி மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்பட்டதோ அதற்கு இணையான அளவிலான வரி ஜிஎஸ்டி முறையிலும் விதிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வரி, ஜிஎஸ்டி வரி விதிப்பின் அதிகபட்ச வரியான 28 சதவீதத்தை விட அதிகம் என குறிப்பிட்ட அவர், ஜிஎஸ்டி முறையில் 28 சதவீத வரியை மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதித்தால் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசிடம் போதிய பணம் இல்லாத நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஜிஎஸ்டியுடன் சேர்த்து மாநில அரசாங்கங்களும் விற்பனை வரி விதிக்க மத்திய அரசு அனுமதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகாரி சொல்வதுபடி பார்த்தால் பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு குறையாது போல இருக்கே. வாகனம் வைத்திருக்கும் ஏழை, நடுத்தர மக்களின் பாடுதான் படு திண்டாட்டம்.