ஜிஎஸ்டி வரி வசூல் - செப்டம்பரில் ரூ.94,000 கோடியாக உயர்வு - இலக்கை எட்டலையே
செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மத்திய அரசு ரூ.94,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாக கடும் சரிவை சந்தித்தது. செப்டம்பர் மாதத்தில் ரூ.94,000 கோடியாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் மொத்தம் ரூ.94,442 கோடியாகும். இதில், மத்திய ஜிஎஸ்டி வருவாயாக ரூ.15,318 கோடியும், மாநில ஜிஎஸ்டி வருவாயாக ரூ.21,061 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ.50,070 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதிக்காக வசூலிக்கப்பட்ட ரூ.25,308 கோடியும் அடங்கும். செஸ் வரியாக ரூ.7,993 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் இறக்குமதிக்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.769 கோடியாகும். ரீபண்ட் தொகை வழங்கியது போக, மத்திய அரசின் வரி வருவாய் மட்டும் ரூ.30,574 கோடியாகும். அதேபோல, மாநில அரசுகளின் வரி வருவாய் ரூ.35,015 கோடி.
முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.93,690 கோடியாக மட்டுமே இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் வரி வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2017-18ஆம் நிதியாண்டில் சராசரியாக 89,895 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்ச அளவாக ரூ.1,03,459 கோடியாக இருந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் வரி வசூலில் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்தது. இது 2018-19 ஆம் நிதியாண்டில் குறைவான வரி வசூல் என்று நிதியமைச்சகம் அறிவித்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.94,000 கோடியாக வசூலானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற 30வது ஜிஎஸ்டி குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியால் ஏற்பட்ட பற்றாக்குறை 16 சதவீதமாக இருந்தது என்றும், இந்த ஆண்டு 13 சதவீதமாக உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த விகிதம் குறையக் குறைய தங்களுக்கான வருவாயை மாநில அரசுகள் தாமாகவே தேடிக் கொள்ள இயலும் என்றும் விளக்கம் அளித்தார். 5 ஆண்டுகளுக்குள் மாநிலங்களுக்கான பற்றாக்குறையை பூஜ்யம் என்ற நிலைக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.