ஜிஎஸ்டி வரியை 3 பிரிவுகளாகக் குறைக்கத் திட்டம் - பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால்
ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 3 அடுக்குகளாக குறைக்கப்படும் என மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரான சஞ்சீவ் சன்யால்
கொல்கத்தா: ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 4 பிரிவுகளில் இருந்து 3 பிரிவுகளாக குறைக்கப்படும் என்ற மத்திய நிதி அமைச்சக முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் சூசகமாக தெரிவித்தார்.
நாடுமுழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட போது வரி விதிப்பு முறைகள் 5%, 12%, 18% மற்றும் 28% என 4 பிரிவுகளாகவும் பின்னர் தங்க நகைகளுக்கு என தனியாக 3 சதவிகிதம் என் மொத்தத்தில் 5 பிரிவுகளாக இருந்தது. இவற்றில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டதால் பொதுமக்களும் வர்த்தகர்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட உட்சபட்ச வரி விகிதத்தை குறைக்குமாறும், வரி விலக்கு அளிக்குமாறும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு வேண்டுகோள் விடுத்தனர். மத்தியபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாதந்தோறும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து பொதுமக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கான உட்சபட்ச ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்தும், கூடவே சில பொருட்களுக்கான அதிகபட்ச வரியை நீக்கியும் உத்தரவிட்டார்.
பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் விற்பனை சூடுபிடித்து ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தாலும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குறைபட்டுக்கொண்டனர். தற்போது நடைமுறையில் இருக்கும் 5 பிரிவு வரி விகிதங்களை 2 பிரிவுகளாக குறைக்கவேண்டும் என்றும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. சில சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியும் நீக்கப்பட்டு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. ஆனாலும் வர்ததகர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்த ஜிஎஸ்டி வரிமுறை மாற்றம் பற்றிய எந்தவிதமான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இதனால் வர்த்தகர்களும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக 4 அடுக்குகளாக இருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்களை 3 அடுக்குகளாக குறைக்க ஆலோசித்து வந்தது. மேலும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவிருப்பதால், பொதுமக்களின் அதிருப்தியை போக்கும் விதத்தில் ஜிஎஸ்டி வரி விகிதத்தை கண்டிப்பாக குறைக்கும் என்று அனைவரும் எதிர்பர்த்தனர்.
வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில், மத்திய நிதியமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், தற்போது 4 பிரிவுகளாக இருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 3 பிரிவுகளாக மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொல்கொத்தாவில் நடைபெற்ற பாரதீய வர்த்தக சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது இதனை அவர் தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள 5 சதவிகிதத்துடன் 12 சதவிகிதத்துடன் 18 சதவிகிதம் இணைக்கப்பட்டு 15 சதவிகிதமாகவும் 28 சதவிகிதத்திற்கு பதிலாக 25 சதவிகித வரிமுறையும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கூடவே பெரும்பாலான பொருட்கள் 15 சதவிகித வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்படும் என்றும், ஆனாலும் இதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில், பீஹார் மாநில துணை முதல்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் உயர்மட்ட குழுவின் தலைவருமான சுசில் மோடியும் எதிர்காலத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.