ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது ஜிஎஸ்டி - சக்தி காந்த தாஸ்
ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரும் என பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையானது நீண்ட இழுபறிக்குப் பின் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்தி காந்த தாஸ் இதனை கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலங்களின் வரி வருவாயைப் பெருக்கும் நோக்கத்துடன் விருப்பம் போல் வரி விதிப்பு முறையை கையாண்டு வந்தார்கள். இதனால் உற்பத்தியாளர்களும் வியாபரிகளும் செயற்கையாக பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்து வந்தார்கள்.
பெரும்பாலான வியாபாரிகள் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன் பொருட்களை விலைப்பட்டியல் மற்றும் ரசீது இல்லாமல் விற்பனை செய்துவந்தனர். இதனால், நாட்டின் வரி வருவாய் குறைந்ததுடன், பொருளாதாரமும் வளர்ச்சி அடையாமல் இருந்தது.
இதற்கு நேர்மாறாக கள்ள பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது இதன்மூலம், பொருட்களின் விலை உயர்ந்ததுடன் பண வீக்கமும் அதிகரித்துக் கொண்டு வந்தது. எனவே, கள்ள பொருளாதாரத்தை ஒழிக்கவும் வரி ஏய்ப்பை தடுக்கவும் நாட்டின் வரி வருவாயை பெருக்கவும் மத்திய அரசு பல்வேறு கட்ட முயற்சி செய்து இறுதியில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
முதலில் இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்த பெரும்பாலான மாநிலங்கள் முன்வரவில்லை. ஏன் என்றால், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை அமல்படுத்தினால், தங்களின் வரி வருவாய் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தன.
பின்னர் இதற்காக அனைத்து மாநிலங்களுடனும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு, அனைத்து மாநிலங்களும் இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்த ஒப்புக்கொண்டன.
சரக்கு மற்றும் சேவை வரி
இதனை அடுத்து சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டியது. ஆனால், அதில் நடைமுறை சிக்கல் எழுந்ததால் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்த உறுதி அளித்தது.
சக்தி காந்த தாஸ்
மத்திய அரசு உறுதி அளித்தது போலவே, வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலுக்கு வரும் என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்தி காந்த தாஸ் நேற்று இதனை தெரிவித்தார். பிரிட்டனில் லண்டன் நகரில் நடக்கும் பிரிட்டன்-இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
தாமதம் ஏன்?
இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய மத்திய நிதித்துறை உயர் அதிகாரிகள், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை வரும் நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு பகீரத முயற்சி எடுத்தது. இதற்கான சட்ட முன் வரைவும் வகுக்கப்பட்டன. ஆயினும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதன் காரணமாகவே சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் மசோதா
மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மீண்டும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்படவேண்டும். அதன்பின்னர். வரும் மார்ச் 9ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தின் போது, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்படவேண்டும்.
ஜூலை 1 முதல் அமல்
பின்னர், ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு கவுன்சிலின் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டு. இதற்கான சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவேண்டும். அதன் பின்னரே, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதித்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.