ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்ய தடுமாறும் நிறுவனங்கள்- மத்திய அரசு புள்ளிவிபரம்
மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சீராக அதிகரித்தாலும், ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதில் இருந்து 16 சதவிகிதம் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் தவிர்த்து வருவதாக மத்திய மத்திய அரசின் புள்ளி வ
டெல்லி: மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சீராக அதிகரித்தாலும், ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதில் இருந்து 16 சதவிகிதம் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் தவிர்த்து வருவதாக மத்திய மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. காம்போசிட் டீலர்கள் காலாண்டு ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஒவ்வொரு காலாண்டிற்கும் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை சராசரியாக 20 சதவிகிதமாகும். 2018ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.28 சதவிகிமாகவும், அடுத்து வந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தடாலடியாக 25.37 சதவிகிதமாகவும் எகிறியது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையானது கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது 5%, 12%, 18% , 28% மற்றும் 0% சதவிகிதம் என ஐந்து பிரிவுகளில் வரி விதிப்பு முறை இருந்தன. இதில் பெரும்பாலான பொருட்களுக்கு உச்சபட்ச வரியான 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.
இதில் அதிருப்தி அடைந்த வர்த்தகர்களும் தொழில் துறையினரும் மத்திய அரசிடம் முறையிட்டனர். மத்திய அரசும் இவர்களின் கோரிக்கையை ஏற்று படிப்படியாக உச்சபட்ச வரிவிதிப்பில் இருந்த பொருட்களை 12 சதவிகிதம் மற்றும் 18 சதவிகித வரி கட்டமைப்பிற்கு மாற்றி அமைத்தது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்ட விதிகளின்படி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பதிவு செய்த அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களும், மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வது கட்டாயமாகும். கலப்பு வருவாய் (composition scheme) பிரிவில் உள்ள வர்த்தகர்கள் அனைவரும் காலாண்டு ஜிஎஸ்டி ரிட்டன்களும், சேவை பிரிவின் கீழ் வருவோர் (Input Service distributor) தங்களுடைய உள்ளீட்டு வரி வருவாய் இனங்களை பிரதி மாதாந்திர ரிட்டன்களிலும் தெரிவிப்பது அவசியமாகும்.
மேலும் வருமான வரி பிடித்தங்களையும் (Tax Deduction at source)வருமான வரி வரவுகளையும் (Tax collection at source) மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டனில் தெரிவிக்கவேண்டியது கட்டாயமாகும். அதுபோலவே, வெளிநாட்டில் இருந்துகொண்டு வர்த்தகம் செய்யும் அனைத்து இந்தியர்களும், தங்களின் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஜிஎஸ்டி ரிட்டன்களிள் பதிவு செய்வது கட்டாயமாகும்.
ஆரம்பத்தில் ஜிஎஸ்டி இணைய தளத்தில் சிற்சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததால், ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதில் சுனக்கம் ஏற்பட்டு, ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்தது. பின்னர் ஜிஎஸ்டி இணையதளத்தில் நிலவிய தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதால், மாதாந்திர ஜிஎஸ்டி வரி வருவாய் சீராக அதிகரிக்கத் தொடங்கியது.
ஜிஎஸ்டி ஆணையமும் வர்த்தகர்களின் சிரமங்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து வந்தது. ஜிஎஸ்டி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டு ஜூலை மாத ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது. அது தற்போது படிப்படியாக குறைந்து 15 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை காலதாமாக (late filing) தாக்கல் செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி ஆணையம் அபராதமும் வட்டியும் விதித்து வருகிறது. ஜிஎஸ்டிஆர்-3பி (GSTR-3B) படிவத்தை கால தாமதமாக தாக்கல் செய்தால் அதற்காக நாள் ஒன்றுக்கு 50 ரூபாயை அபராதமாக விதித்து வருகிறது.
CGST எனப்படும் மத்திய தொகுப்பிற்கு 25 ரூபாயும் SGST எனப்படும் மாநில தொகுப்பிற்கு 25 ரூபாய் என 50 ரூபாரய அபராதமாக வசூலித்து வருகிறது. எந்தவிதமான வரியும் இல்லாமல் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்தாலும், கால தாமதக் கட்டணமாக நாள் ஒன்றுக்கு 20 ரூபாயை வசூலித்து வருகிறது. இருந்தாலும் அதிகபட்சமாக 5000 ரூபாயை வரையில் காலதாமத கட்டணத்தை ஜிஎஸ்டி ஆணையம் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வசூலித்து வருவது தொடர்கிறது.
கால தாமதத்திற்கு அபராதம் செலுத்துவதை தவிர்க்க 1 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக விற்று முதல் (Turnover) உள்ளவர்கள் பிரதி மாத காலக்கெடுவிற்குள் தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்துவிடுவதுண்டு. ஆனால், 25 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலும் உள்ள கலப்பு வருவாய் பிரிவின் (Composition scheme assessees)உள்ளவர்கள் காலாண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜிஎஸ்டி காலாண்டு ரிட்டன்களை தாக்கல் செய்யலாம். இருந்தாலும் பெரும்பாலான காம்போசிட் டீலர்கள் காலாண்டு ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஒவ்வொரு காலாண்டிற்கும் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை சராசரியாக 20 சதவிகிதமாகும்.
மத்திய அரசின் புள்ளி விவரப்படி ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் பருவத்தில், காலாண்டு ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதமாகும். அதுவே அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 15.91 சதவிகிமாகவும், ஜனவரி-மார்ச் காலாண்டில் 23.1 சதவிகிமாகவும் அதிகரித்தது. ஆனாலும், அடுத்து வந்த 2018ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.28 சதவிகிமாகவும், அடுத்து வந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தடாலடியாக 25.37 சதவிகிதமாகவும் எகிறியது. சராசரியாக 16 சதவிகிமாக உள்ளது. ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையிலும், வர்த்தக நிறுவனங்களை ஆய்வு
செய்ததன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் வாயிலாகம் மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் பல நிறுவனங்களின் வாயிலாக மத்திய அரசு நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இதன்மூலம் வரி ஏய்ப்பு செய்வதையும், போலியான ஆவணங்கள் தயார் செய்வதையும் கூடுமானவரை தவிர்க்க முடியும் என்று மத்திய நிதி அமைச்சகம் லோக்சபாவில் தெரிவித்துள்ளது.