விரைவில் பொதுத்துறை நிறுவனமாகிறது ஜிஎஸ்டிஎன் ஆணையம்
ஜிஎஸ்டிஎன் ஆணையம் வெகு விரைவில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
டெல்லி: மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிஎஸ்டிஎன் ஆணையம் வெகு விரைவில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்படக்கூடும் என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் பலமுனை வரிகளாகவும், மத்திய அரசுக்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வருவாயை கூட்டும் வகையில் அந்த அந்த மாநிலங்களின் வசதிக்கு ஏற்ற வகையிலும் இருந்த வாட் வரி, சுங்க வரி, கலால் வரி மற்றும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் செல்ல சாலை வரி, சேவை வரி என இருந்து வந்தது.
இந்த வரிமுறைகளை மாற்றி நாடு முழுவதும் ஒரே சீரான வரி முறையை நடைமுறைப் படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதுதான் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையாகும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை கொண்டுவருவது என தீர்மானிக்கப்பட்டவுடன், அதற்கென சட்ட திட்டங்கள் முறைப்படுத்தப்பட்டு, லாபநோக்கம் இல்லாத தனியார் நிறுவனமாக கடந்த 2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் படி ஜிஎஸ்டிஎன் (Goods and Service Tax Network) ஆணையம் நிறுவனமாக தொடங்கப்பட்டது.
ஜிஎஸ்டிஎன் நிறுவனத்தை தொடங்க அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக (Authorized Capital) 10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் மத்திய அரசு தன்னுடைய பங்ககாக 24.5 சதவிகிதத்தையும், மாநில அரசுகள் மற்றும் ஆட்சி மன்றக் குழுக்கள் தங்களுடைய பங்களிப்பாக 24.5 சதவிகிதத்தையும் சேர்த்து 49 சதவிதித பங்கு மூலதனத்தை அளித்தன.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் துணை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் 11 சதவிகிதமும், தனியார் துறையைச் சார்ந்த எச்டிஎப்சி நிறுவனம் 10 சதவிகிதம், எச்டிஎப்சி வங்கி 10 சதவிகிதம், ஐசிஐசிஐ வங்கி 10 சதவிகிதம், என்எஸ்சி ஸ்ட்ரேட்டஜிக் இன்வெஸ்ட்மென் நிறுவனம் 10 சதவிகிதம் என் மீதமுள்ள 51 சதவிகி மூலதனத்தை அளித்தன.
ஜிஎஸ்டிஎன் ஆணையம் தனியார் நிறுவனமாக 2013ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டாலும், 2014ம் ஆண்டு பிஜேபி கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது.
ஜிஎஸ்டிஎன் என்னும் நிறுவனத்தின் அனைத்துவிதமான இணையதள கட்டமைப்பையும் உருவாக்கும் முக்கிய பணியில் முதுகெலும்பாக நாட்டின் முன்னணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் விளங்கியது. ஜிஎஸ்டிஎன் இணையதளத்தை உருவாக்கும் பணிக்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு சுமார் 315 கோடி ரூபாய் ஒப்பந்தத் தொகையாக தரப்பட்டது.
இறுதியில் கடந்த 2017-18ம் நிதியாண்டில் இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டிஎன் வரி விதிப்பு முறையில் தற்போது வரையிலும் சுமார் 1 கோடி வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 90000 கோடி ரூபாய் வரையிலும் தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சரக்குகளை மாநிலங்களுக்கு இடையில் பரிமாற்றம் செய்வதற்கான இ-வே பில் (E-Way Bill) என்னும் புதிய நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம், சரக்குகளை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் கொண்டு செல்ல முடியும். சரக்குகளை ஒரே மாநிலத்திற்குள் கொண்டு செல்வதற்கான இ-வே பில் நடைமுறை வரும் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டிஎன் ஆணையம், மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இது ஒரு தனியார் நிறுவனமாகும். இதனால், ஜிஎஸ்டிஎன் ஆணையத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அனைத்து தகவல்களும் திருடப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் வரி வருவாயில் முறைகேடு நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டிஎன் ஆணையத்தில் முறைகேடுகள் நடக்காமல தடுக்கவேண்டுமானால், இதை மத்திய அரசின் நேர்பார்வையில் பொதுத் துறை நிறுவனமாக மாற்றி அமைக்க மத்திய அரசு யோசித்து வருவதாக, ஜிஎஸ்டிஎன் ஆணைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஜிஎஸ்டிஎன் ஆணையத்தை பொதுத் துறை நிறுவனமாக மாற்றுவதற்கான சாதமான அம்சங்களை ஆராயுமாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிதித் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் சரிதான். ஒருவேளை ஜிஎஸ்டிஎன் ஆணையம் பொதுத் துறை நிறுவனமாக மாற்றப்பட்ட பின்பு, என்ன நடக்கும்?. தற்போது பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த எண்ணை நிறுவனங்களே தினசரி விலையை நிர்ணயம் செய்வதுபோல, ஜிஎஸ்டிஎன் ஆணையமும், ஜிஎஸ்டி வரியை தினசரி மாற்றி அமைக்கும் உரிமையை மத்திய அரசு ஜிஎஸ்டிஎன் ஆணையத்திற்கே கொடுத்துவிடுமோ?