ஹெச் 1 விசா சிக்கல் : கோடை விடுமுறை பயணத்தை ரத்து செய்யும் இந்திய பணியாளர்கள்
ஹெச் 1 பி விசா பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் பணியில் உள்ள இந்தியர்கள் தங்களின் கோடை விடுமுறை பயணத்தை ரத்து செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் கோடை விடுமுறை பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். காரணம் ஹெச் 1 பி விசா பெருவதில் உள்ள புதிய சட்டதிட்டம்தான்.
விடுமுறைக்கு இந்தியா வந்து விட்டு மீண்டும் நாடு திரும்ப முடியாதே என்ற அச்சத்தினால் ஜூன் மாதம் கோடை விடுமுறைக்காக இந்தியா வர திட்டமிட்டிருந்த பயணத்தை பலரும் ரத்து செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கணக்கில் தங்களை விட்டு பிரிந்து போன மகன் கோடை விடுமுறைக்கு வருவான் என்று நம்பிக்கையோடு இந்தியாவில் காத்திருக்கும் பல பெற்றோர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி பணிக்காக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ஹெச்1பி விசா வழங்கி வருகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, முதலில் ஹெச்1பி விசா அளிப்பதில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தினார்.
60000 அமெரிக்க டாலர்கள்
இனிமேல் ஆண்டுக்கு 1,30,000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பளம் பெறும் வெளிநாட்டவர்தான் ஹெச் 1 பி விசா பெற முடியும் என்ற புதிய சட்டத்தினை டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கினார். தற்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000 அமெரிக்க டாலராக உள்ளது. இதனால், இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் செலவு அதிகரிக்கும் என்பதால் அந்நாட்டு நிறுவனங்கள் அமெரிக்கர்களை அதிகமாக பணியமர்த்த வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஹெச் 1 பி விசா
அமெரிக்காவில் பணியாற்றும் பெரும்பாலான இந்தியர்களின் ஆண்டு வருமானம் 60 ஆயிரம் டாலர்கள்தான். ட்ரம்பின் புதிய சட்டத்தினால் இப்போது அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவில் பணி புரிபவர்கள் தாய் நாட்டிற்கு விடுமுறைக்கு வரக்கூட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தியா வந்து விட்டால் ஹெச் 1 விசாவை புதுப்பித்துக்கொண்டு மீண்டும் அமெரிக்க திரும்ப முடியாதோ என்ற அச்சம்தானாம்.
கோடை விடுமுறை பயணம் ரத்து
ட்ரம்பின் புதிய சட்டத்தினால் இந்தியாவிலிருந்து ஏற்கனவே வேலையில் இருக்கும் நபர்களுக்கு இதனால் பாதிப்பு எதுவுமில்லை. எனினும், அவர்கள் விசாவினைப் புதுப்பிக்கும்போதும், இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பும்போதும் சிலருக்கு நடைமுறைச் சிக்கல்களால் விசா கிடைக்காமல் போகலாம். இந்த பயத்தின் காரணமாகவே அங்கிருக்கும் இந்திய ஊழியர்கள், விடுமுறைக்கு கூட சொந்த ஊர் திரும்ப அஞ்சுகின்றனர். பல இந்தியர்கள் கோடை விடுமுறைக்கு தாய் நாட்டிற்கு வருவதற்காக தாங்கள் ஆசை ஆசையாய் புக் செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்து வருகின்றனராம், சிலர் ஒத்திப்போடுகின்றனராம்.
இரட்டிப்பாக்கிய ட்ரம்ப்
ஹெச் 1 பி விசா பெற ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலர்கள் சம்பளம் பெற்றால் போதும் என்ற நடைமுறை 1989ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இது ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் திறமையான பணியாளர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் அமெரிக்கா பணியாளர்களில் 2.4 மில்லியன் பேர் கணிதம், பொறியியல், தொழில் நுட்பத்தில் திறமையற்றவர்களாக இருப்பதாக அந்த நாட்டு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
நாஸ்காம் கணிப்பு
டிரம்பின் புதிய சட்டம் இந்திய ஐடி நிறுவனங்களின் செலவீனத்தை அதிகரிக்கும் என்று நாஸ்காம் கணித்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் ஆண்டுக்கு 65% அதாவது 155 பில்லியன் டாலர்கள் வருமானத்தை அமெரிக்காவில் இருந்து ஈட்டுவதாக நாஸ்காம் தெரிவிக்கிறது.
சிலிக்கான் வேலி ஊழியர்கள்
அமெரிக்காவில் உள்ள எம்என்சிகளில் பணிபுரியும் ஐடி ஊழியர்களும், சிலிக்கான் வேலியில் பணிபுரியும் ஐடி ஊழியர்களும் ஒரு வித அச்சத்துடனேயே இருக்கின்றனர். எந்த காரணத்திற்காகவும் தங்களின் பணியை இழக்க அவர்கள் தயாராகவே இல்லை. இதன் காரணமாக தாய் நாட்டிற்கு கோடை விடுமுறைக்கு வரும் திட்டத்தை ஒத்திப் போட்டு வருகின்றனர். சிலர் ரத்து செய்கின்றனர்.
சிக்கல் நேருமோ?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள், மனைவி,குழந்தைகளை விட்டு விட்டு அமெரிக்காவிற்கு சென்றவர்களைக் கூட அமெரிக்க டாலர் கட்டிப்போட்டு வைத்துள்ளது. விடுமுறைக்குக் இந்தியா வந்து விட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பும் போது ஏதேனும் சிக்கல் நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம்தான் அவர்களை விடுமுறை பயணத்தை ரத்து செய்ய வைக்கின்றது.
அச்சம் வேண்டாம்
அதே நேரத்தில் இந்த அச்சம் சில ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று ஏபிசி கன்சல்டண்ட் நிர்வாக இயக்குநர் சிவ் அகர்வால் கூறியுள்ளார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஹெச் 1 பி விசா மூலம் அமெரிக்கா செல்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பிவிடலாமா?
அதே நேரத்தில் அமெரிக்க அரசின் புதிய சட்ட திட்டத்தினால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம், மறுபுறம் விடுமுறைக்கு கூட இந்தியாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே என்ற ஏக்கம் மறுபக்கம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சம்பாதித்த வரை போதும், ஊரை பார்க்க போய்விடலாமா என்று பலரும் யோசிக்கத் தொடங்கி விட்டார்களாம்.