எச்-4 விசா இஏடி பணி ஆணை ரத்து ஜூனில் அறிவிப்பு வெளியாகிறது - 70 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று பணிபுரிபவர்களின் எச்-4 விசா பெற்ற கணவர் அல்லது மனைவி வேலை செய்ய ஒபாமா அரசு வழங்கிய அனுமதியை ட்ரம்ப் அரசு ரத்து செய்ய உள்ளதால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும்
நியூயார்க்: எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் எச்-4 விசாவின் மூலம் பணிபுரிந்து வருகிற 70,000 பேருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 விசா அளிக்கப்படுகிறது. எச்-4 விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்களாவர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சிக் காலத்தில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி தங்களிடமுள்ள எச்-4 விசாவின் மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் எச்-1பி விசாவில் அதிகம் பணியமர்த்தப்படுகின்றனர். இந்த விசா மூலம் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் தங்கி பணியாற்றலாம். அவர்களின் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் விசாவை நீட்டிக்கலாம். 6 ஆண்டு பணியாற்றியவர்கள், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்றுவதற்கான கிரீன்கார்டு கோரி விண்ணப்பிக்கலாம். எச்- 1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவனையும் அழைத்துச் செல்ல முடியும். அவர்கள் எச்-4 விசாவில் பணியாற்றலாம். இந்த எச்-4 விசா பணி அனுமதி திட்டம் மூலம் 71,287 பேர் பயனடைந்துள்ளதாகச் சொல்கிறது அமெரிக்காவின் மைக்ரேஷன் பாலிஸி இன்ஸ்டிடியூட் ஆய்வு. இதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள். எச்-4 விசா மூலம் பயனடைந்தவர்களில் 94 சதவீதம் பேர் பெண்கள். இதில் இந்தியப் பெண்கள் மட்டும் சுமார் 62,000 பேர்.
இந்த சட்டத்தை நீக்க தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் எச்-4 விசாவின் மூலம் பணிபுரிந்து வருகிற 70,000 பேருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சட்ட திருத்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், உள்ளூர் பாதுகாப்புத் துறையின் அனுமதிக்காக தற்பொழுது அனுப்பப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உள்ளூர் பாதுகாப்புத் துறை அனுமதி அளித்ததும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் மேற்பார்வை துறைக்கு இது அனுப்பி வைக்கப்படும் எனவும் ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து எச்-1பி விசா வழங்குவதில் கடுமையான கெடுபிடிகள் அமலாகி வருகின்றன. அமெரிக்க பொருள்களை வாங்கு,அமெரிக்கர்களை வேலையில் அமர்த்து என்ற கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வரும் ட்ரம்ப், அதற்கேற்ப அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் துறை விசா நடைமுறைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மேலும், எச்-4 விசாதாரர்கள் வேலை செய்வதற்கான அனுமதியை ரத்து செய்யும் புதிய விதியை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு துறை அனுமதிக்கு பின்னர், நிர்வாக ரீதியான ஆணை பிறப்பிக்கப்படுவதற்காக நிர்வாகம் மற்றும் நிதிநிலை அறிக்கை அலுவலகத்திற்கு இந்த சட்டம் அனுப்பப்படும் என்றும் தெரிகிறது. எச்-4 விசாதாரர் வேலை செய்யும் உரிமையை பறிக்கும் இந்த சட்டம் வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இந்த ஹெச்-4 விசா மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றாலும், எச்-4 விசா மூலம் அதிகம் பயன்பெற்றது இந்தியர்கள்தான். சுமார் 71,000க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள். ட்ரம்ப் அரசின் முடிவு காரணமாக அவர்கள் தங்களது வேலையை இழந்து தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எச்-4 விசா ரத்து செய்யப்பட்டால், அமெரிக்காவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, அமெரிக்க பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று என்பதால் அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.