வங்கிகளில் நிதிச்சிக்கல் : 2019 மார்ச்சுக்குள் 1.15 லட்சம் ஏடிஎம்களை மூடப்போறாங்களாம்- அலர்ட்
2019 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் சுமார் 1.15 லட்சம் ஏடிஎம்களை மூட வங்கிகள் முடிவு செய்து வருவதாக ஏடிஎம் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் தொழில்துறை அமைப்பான ஏடிஎம் இயந்திரங்கள் உற்பத்தியாளர் கூட
டெல்லி: ஏடிஎம் இயந்திரங்களை பராமரிப்பதற்காக அதிக அளவில் செலவிட வேண்டியிருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1.15 லட்சம் ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாக தொழில்துறை அமைப்பான ஏடிஎம் இயந்திரங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (CATMi) கூறியுள்ளது.
முன்பெல்லாம் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும், எடுக்கவும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏடிஎம்கள் வந்த பின்னர் பணத்தை எடுக்கவும், டெபாசிட் செய்யவும் எளிதாகி விட்டது. பணப் பரிவர்த்தனைகளில், ஏடிஎம் சேவை மக்களுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. எளிதாக பணத்தை எடுக்க முடிவதால் ஏடிஎம்கள் அத்தியாவசிய தேவையாகிவிட்டது.
இந்தியாவில் செயல்படும் பல்வேறு வங்கிகள் நாடு முழுவதும் 2.38 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை நிறுவியுள்ளன. இவற்றை பராமரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது.
1.15 லட்சம் ஏடிஎம்கள் மூடல்
இந்த நிலையில் தொழில்துறை அமைப்பான ஏடிஎம் இயந்திரங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் சுமார் 2.38 லட்சம் ஏடிஎம்களில் 1.15 லட்சம் ஏடிஎம்கள் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மூடப்பட வாய்ப்புள்ளது. பணப் பரிவர்த்தனையில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த நடவடிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதியன்று பிரதமர் மோடி உயர் பண மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் முதல் ஏடிஎம்கள் மூடப்பட்டன. வங்கிகளில் பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. வங்கி வாசல்களில் மக்கள் காத்திருந்தனர்.
வண்ண வண்ண ரூபாய் நோட்டுக்கள்
திடீர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக, ரூபாய் நோட்டுகளின் அளவு குறைக்கப்பட்டது. பிங்க், மஞ்சள், நீலம் என கலர் கலராக ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் தற்போது இயங்கி வரும் ஏடிஎம்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக வடிவமைப்பட்டவை ஆகும். அதனால் பழைய ரூபாய் நோட்டுக்களுக்கான அளவுகளுடன் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதில் வங்கிகள் பெரிய சிக்கலை சந்தித்து வருகின்றன.
வங்கிகளுக்கு நிதிச்சிக்கல்
புதிய ரூபாய் நோட்டுகளை பாரமாரிக்கும் வகையில் ஏடிஎம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு அதிகளவிலான பொருட்செலவு ஏற்படும். மேலும் ஏடிஎம்களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை வங்கிகள் மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாட்டின் பெரும்பாலான ஏடிஎம்களின் மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்களை மூட காரணம்
இதனால் பல வங்கிகளுக்கு நிதி சிக்கல் எழுந்துள்ளது. அதற்காக ஏற்பட்ட இழப்புகளிலிருந்து நிறுவனங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதன் காரணமாக 1.15 லட்சம் ஏடிஎம்களை மூட வங்கிகள் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதிச் சேவை நடவடிக்கைகளில் அரசு மேற்கொண்டுவரும் மாற்றங்கள் காரணமாக ஏடிஎம் மூடும் நடவடிக்கைகள் இருக்கும். குறிப்பாக மென்பொருட்களில் நிகழும் மாற்றங்கள், பணப் பரிமாற்றங்களில் நிகழும் மாற்றங்கள், ஸ்வைப்பிங் இயந்திரங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஏடிஎம்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
பாதிப்பு மக்களுக்குதான்
ஏடிஎம் சேவை வழங்குவதில், கூடுதல் செலவீனங்களை சந்திப்பதற்கான திட்டங்களை எதுவும் இல்லை. ஒருவேளை வங்கிகள் இதனை ஈடு செய்ய தவறினால், அது ஏடிஎம்களை மூட வழிவகுக்கும் என ஏடிஎம் இயந்திரங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு. பெரும்பாலான ஏடிஎம்கள் புற நகர்களில் இருப்பவையாகும். இந்த நடவடிக்கைகளினால் அரசின் மானியத் தொகையை ஏடிஎம்களில் எடுத்து வருபவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. வங்கிகள் ஏடிஎம்களை மூடும் நடவடிக்கைகளை அமல்படுத்தினால், அரசு உதவி பெறும் குடும்பங்கள் நிலை கவலைக்கிடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.