வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல - ஹைகோர்ட்
வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வருமான வரிச் சட்டம் 139AA-இன் படி, வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாமல் அல்லது விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது செல்லாததாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஆதாரைக் கட்டாயமாக்கியிருந்தது.
இதை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் பினோய் விஸ்வம் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் சேர்த்துள்ள 139 ஏஏ என்ற புதிய பிரிவு பாரபட்சமானது என்றும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் தொழில் மற்றும் உரிமைகளில் தேவை இல்லாமல் தலையிடும் செயல் என்றும், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அந்தரங்க தகவல்கள் கசியும் ஆபத்து உள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.
எனவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள், தங்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் அல்ல. ஆதார் எண் இல்லாதவர்களிடம் ஆதார் எண்ணை தருமாறு வற்புறுத்தக்கூடாது. ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் கார்டுக்காக விண்ணப்பம் செய்து இருப்பவர்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தேவை இல்லை என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பிரீத்தி மோகன் என்ற பெண் தனது வழக்கறிஞர் சுரித் பார்த்தசாரதி உதவியுடன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆதார் எண் இல்லாதவர்கள் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யும்போது ஆதாரை எண்ணை இணைக்க இயலாது, எனவே அந்தக் கட்டுப்பாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அக்டோபர் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையிர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று தீர்ப்பளித்துள்ளார்.