எச்டிஎஃப்சி மற்றும் எஸ் பேங்க்கில் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு
எச்டிஎஃப்சி வங்கியும் எஸ் வங்கியும் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு முடிவெடுத்துள்ளன.
மும்பை: சேமிப்பு வங்கிக்கணக்கிற்கு வட்டியை குறைப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு அடுத்து தற்போது எச்டிஎஃபி மற்றும் வெளிநாட்டு வங்கியான எஸ் பேங்க்கும் வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்துள்ளது வாடிக்கையாளர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு பணவீக்க விகித அளவானது 2 சதவிதத்திற்கும் கீழே இறங்கியதால், மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகித்தை 0.50 புள்ளிகள் குறைக்கும் என்று பெரும்பாலானவர்களும் பொருளாதார வல்லுநர்களும் எதிர்பார்த்த நிலையில் வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் மட்டுமே குறைத்தது.
இதனை முன்கூட்டியே உணர்ந்தே என்னவோ, பாரத ஸ்டேட் வங்கியானது வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு அளிக்கும் வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைத்துவிட்டது.
மத்திய ரிசர்வ் வங்கியும் வேறு வழி இல்லாமல் வங்கிகளுக்கு தரவேண்டிய வட்டி விகிதத்தை குறைத்து விட்டது.
வட்டி விகிதம் குறைப்பு
இதன் பின்னர், மற்றொரு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவும் ஆக்ஸிஸ் வங்கியும் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைத்தது.
வாடிக்கையாளர்கள் கவலை
அதாவது 50 லட்சம் வரையிலும் இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 0.50 சதவிகிதத்தை குறைத்து 3.50 சதவிகிதமாகவும் 50 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அதே 4 சதவிகிதமாகவே தொடரும் என்று அறிவித்தது.
பஞ்சாப் நேசனல் வங்கி
அதுபோலவே, மற்றொரு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 50 லட்சத்திற்கும் குறைவாக இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வட்டியையும் 4 சதவிகிதத்தில் இருந்து 3.5 சதவிகிதமாக குறைத்துள்ளது.
தனியார் வங்கிகளும் வட்டி குறைப்பு
தற்போது தனியார் துறை வங்கிகளும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைப்பதற்கு வரிசை கட்டி நிற்கின்றன. அதற்கு முன்னோட்டமாக எச்டிஎஃப்சி வங்கியும் எஸ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைப்பதற்கு முடிவெடுத்துள்ளன.
எச்டிஎஃப்சி வங்கி
எச்டிஎஃப்சி வங்கி தனது வங்கியில் 50 லட்சம் வரையில் சேமிப்புக் கணக்கில் இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.50 சதவிகிதம் மட்டுமே வட்டி அளிக்க முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்பு 4 சதவிகிதம் வரையில் வட்டி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், 50 லட்சத்திற்கும் மேல் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு அதே 4 சதவிகிதம் வட்டி விகிதமே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
ஆகஸ்ட் 19 முதல் அமல்
இந்த வட்டி விகிதமானது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் பொருந்தும் . இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்டு 19ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
எஸ் வங்கி குறைப்பு
அதுபோலவே, எஸ் வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் 1 லட்சம் வரையிலும் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு 6 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. மேலும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிலையான இருப்பு(Fixed Deposits) வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 6.50 சதவிகித்திலிருந்து 6.25 சதவிகிதமாகவும் குறைத்துள்ளது.