ஆர்.பி.ஐ வட்டி விகித குறைப்பால், வீடு, கார் கடன் சுமை குறைய வாய்ப்பு! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
மும்பை: ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைத்துள்ளதால், வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் மீதான வட்டி விகிதம் மிகவும் குறைய வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கியிடம், கமர்சியல் வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனான ரெபோவுக்கான வட்டி விகிதத்தை 7.25 சதவீதத்தில் இருந்து, 6.75 சதவீதமாக குறைத்துள்ளது ஆர்.பி.ஐ.
இதனால் வங்கிகளுக்கு லாபம் அதிகரிக்கும். இதை வாடிக்கையாளர்களுக்கு மடைமாற்றம் செய்வது வங்கிகளின் அடுத்த நடவடிக்கையாக இருக்கும். ஏர்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வீடு மற்றும் வாகன கடன் மீதான வட்டியை தடாலடியாக குறைத்துள்ளது.
எஸ்.பி.ஐ வீட்டுக்கடன் மீது 9.75 சதவீதம் வட்டி வசூலித்து வந்த நிலையில், தற்போது, அதை 9.3 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு லட்சம் ரூபாய்க்கு, மாதம், ரூ.812.50 வட்டியாக கட்டி வந்த ஒருவர், இனிமேல், ரூ.779.16 கட்டினால் போதும்.
அதேபோல வாகன கடன் வட்டியையும், 10.25 சதவீதத்தில் இருந்து 9.85 சதவீதமாக குறைத்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. எனவே இதுவரை ஒரு லட்சம் ரூபாய்க்கு, மாதம் ரூ.854.16 வட்டியாக செலுத்தி வந்த ஒருவர், இனிமேல், ரூ.820.83 கட்டணமாக செலுத்தினால் போதும்.
இதே பாணியில் அனைத்து வங்கிகளும், தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வட்டியை குறைக்கும் அறிவுப்புகளை அடுத்தடுத்து வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.