பணக்காரர்களுக்கு ரேசன் கட் - பட்டினிச்சாவை தடுக்க பொருட்கள் டோர் டெலிவரி
மூன்று மாதங்கள் தொடர்ந்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தால், குடும்ப அட்டை ரத்து செய்யப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: ரேஷன்கார்டைப் பயன்படுத்தி தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மாநில உணவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு பிறகு பேசிய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதிபடுத்த வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் உரியவர்களுக்குதான் செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு வீடு தேடி சென்று பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். பட்டினிச்சாவு எந்த மாநிலத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. அதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறிகளை மாநில அரசுகளுக்கு வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மானிய விலையில் ரேசன் பொருட்கள்
கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்ததில் இருந்து ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் விலை உயர்த்தப்படவில்லை. அரிசி கிலோ ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும் வழங்கி வருகிறோம். தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்காமல் இருக்கும் பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், ரேஷன் பொருட்கள் தேவைப்படாத மக்களை கண்டறிந்து, அந்த பொருட்களை மற்றவர்களுக்கு வழங்க முடியும். இதனால் பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
3 மாதம் வாங்காவிட்டால் கார்டு கட்
நாட்டில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் முறையாக கார்டுகளை பயன்படுத்துவதில்லை. சில பணக்காரர்கள் ரேஷன்கார்டை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாகும். யாரெல்லாம் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்காமல் இருக்கிறார்களோ அவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யலாம் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மத்திய அரசு அறிவுறுத்தல்
பருவமழை நாடுமுழுவதும் நன்கு பெய்து வருவதால், அடுத்த சில மாதங்களில் காய்கறிகள் விலை உயரக்கூடும், பண்டிகை நேரங்களில் மக்களுக்கு காய்கறிகள் போதுமான அளவில் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பில் இருக்க வேண்டும் .
பட்டினிச்சாவு எந்த மாநிலத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. அதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறிகளை மாநில அரசுகளுக்கு வழங்கி இருக்கிறோம். பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள் விநியோகம் இல்லாததால் பட்டினிச் சாவு ஏற்பட்டது என்ற நிலை இல்லாமையை உருவாக்க வேண்டுமென மாநிலங்களுக்கு வழிகாட்டியுள்ளோம்.
வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்படுவோருக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். ரேஷன் கார்டுகள் இருந்து வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்ற காரணமாக ரேஷன் கடைகளுக்குவரமுடியாத நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சப்ளை செய்யுங்கள் எனவும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம். சில பயனாளிகள் வயது முதிர்வாலோ, உடல் குறைபாட்டாலோ ரேஷன் கடைகளுக்கு வந்து உணவுப் பொருட்கள் வாங்க இயலாத நிலை இருக்கலாம். அவர்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்றும் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.