ஆர்.பி.ஐ தாக்கம்: எல்லா வங்கிகளையும்விட குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்! எஸ்பிஐ அறிவிப்பு
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. நாட்டிலுள்ள பிற வங்கிகளைவிட மிக குறைந்த வட்டியில் கடனளிக்க அந்த வங்கி தயாராகியுள்ளதால், பிற வங்கிகளுக்கும், வட்டியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் கமர்ஷியல் வங்கிகள் கடன் வாங்குவது வங்கிகளுக்கு முக்கிய நிதி ஆதாரம். இந்த கடன் மீதான வட்டியை 6.75 சதவீதமாக குறைத்து, ரிசரவ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் நேற்று அறிவித்தார்.
மிக குறைவு
ரெபோ எனப்படும், குறுகிய காலக் கடனுக்கான வங்கி வட்டி விகிதம், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கியிடமிருந்து, வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம், 7.25 சதவீதத்திலிருந்து, 6.75 சதவீதமாகி உள்ளது. கடந்த, நான்கரை ஆண்டுகளில், இது மிகக்குறைவு
வாடிக்கையாளர்களுக்கு பலன்
மேலும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த பயனை கைமாற்றிவிடுமாறும் ரகுராம் ராஜன் கேட்டுக்கொண்டார். அதாவது, ஆர்.பி.ஐயிடமிருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி குறைந்துவிட்டதால், வங்கிகளுக்கு லாபம் அதிகரித்துவிடும். அந்த லாபத்தை குறைத்துக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கான வட்டியை குறைக்குமாறுதான், ரகுராம் ராஜன் கேட்டுக்கொண்டார்.
குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்
இந்நிலையில், இந்திய ஸ்டேட் வங்கி உடனடியாக, வட்டி குறைப்பை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. 40 அடிப்படை பாயிண்டுகளை குறைத்துக்கொண்டு, எல்லாவகை கடன்களுக்குமான அடிப்படை வட்டி விகிதத்தை 9.3 சதவீதம் என்று அந்த வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பிற வங்கிகளுடன் ஒப்பிட்டால், எஸ்.பி.ஐயின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம்தான் மிக குறைவாகும். இதன் மூலம் போட்டியை சமாளிக்க பிற வங்கிகளும் வட்டியை குறைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
முன்பு குறைக்கவில்லை
நடப்பு வருடத்தில், ஆர்.பி.ஐ சுமார், 125 அடிப்படை பாயிண்டுகளை குறைத்துள்ளது. ஆனால், வங்கிகள் சராசரியாக 25-30 அடிப்படை பாயிண்டுகளை மட்டுமே குறைத்தன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை. வராக்கடன் தொகை அதிகமாக உள்ளதால், அந்த இழப்பை ஈடுகட்ட, வட்டி விகிதத்தை குறைக்க முடியவில்லை என்று அப்போது வங்கிகள் காரணம் கூறின.
வாகன கடன் வட்டி
ஆனால், எஸ்.பி.ஐ வங்கி ஒரே நேரத்தில் 40 பாயிண்டுகளை குறைத்துக்கொண்டுள்ளது வாடிக்கையாளர்கள் பார்வையில் வரவேற்கத்தக்கதாக உள்ளது. எஸ்.பி.ஐயின் வாகன கடன் வட்டி விகிதம், 10.25 சதவீதத்தில் இருந்து, 9.85 சதவீதமாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.