1,500 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் எச்டிசி - காரணம் என்ன?
தைவான் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் எச்டிசி நிறுவனம் 1,500 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
மும்பை: தொடர் நஷ்டம் காரணமாக 1,500 ஊழியர்களுக்கு கல்தா கொடுக்கிறது எச்டிசி நிறுவனம். பெரிய நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் எச்டிசி நிறுவனம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாகவே ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாக எச்டிசி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், எச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவை கூகுள் நிறுவனம் வாங்கியது. இந்த கையகப்படுத்துதலின் மதிப்பு 110 கோடி டாலர். இதன் காரணமாக எச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவில் பணிபுரிந்து வந்த 2,000 ஊழியர்கள் கூகுள் நிறுவன ஊழியர்களாக மாறினர்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், எச்டிசி நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால், அந்த நிறுவனம் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தைவானில் உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எச்டிசி நிறுவனம் எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டிலிருந்து எச்டிசி நிறுவனம் லாபத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 1,500 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க எச்டிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறை போட்டி நிறைந்ததாக மாறி வருகிறது. ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹவாய் நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் எச்டிசி நிறுவனம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாகவே ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாக எச்டிசி தெரிவித்துள்ளது.