உயர் பணவீக்கத்தால் பொருளாதார வீழ்ச்சியை சந்திந்த நாடுகள் - உணவுக்காக அல்லாடும் மக்கள்
அதிக பணவீக்கம், பணமதிப்பு வீழ்ச்சியால் உலகத்தில் பல நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்னை: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. இறக்குமதியாளர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இதனை வெளிநாட்டு முதலீடுகள் மூலம் நிலைநிறுத்த முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்றாலும் ஏராளமான முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
உயர்பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பல நாடுகளின் நாணயங்கள் மிக மோசமான நிலைக்குச் சென்றதால் வெனிசூலா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் உணவுக்காகவும், உணவுப் பொருட்களை வாங்கவும் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
பொருளாதார வீழ்ச்சியினால் மிக மோசமான நிலைக்குச் சென்ற வெளிநாட்டு நாணயங்களையும், இதற்காக மக்கள் படும் துயரங்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
[14 வருட கட்டுமானம்.. 154 மீட்டர் உயர கோபுரம்.. டெல்லியில் திறக்கப்படும் அசத்தல் சிக்னேச்சர் பாலம்!]
வெனிசூலா
வெனிசூலா நாட்டு நாணயத்தின் பெயர் பொலிவர். அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ 100 பொலிவர் பணத்தைச் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு மாற்றாக 500 பொலிவர்கள் புழக்கத்தில் இருக்கும் என்றார். இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்த மறு பணமதிப்பு மாற்றத்தால் வெனிசுலா பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இதனால் ஒருவேளை உணவுக்கே வழியின்றி அந்நாட்டு மக்கள் தவித்தனர். வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் பணமான ‘பொலிவாரின்' மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வெனிசூலாவின் பண வீக்கம் 82 ஆயிரத்து 700 சதவீதத்தை எட்டியது. இந்த ஆண்டு வெனிசூலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தைத் தொடும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.
மக்கள் கவலை
வெனிசூலா தலை நகர் காரகாசில் ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவார்களுக்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை 75 லட்சம் பொலிவார்கள். ஒரு கிலோ தக்காளியின் விலை 50 லட்சம் பொலிவார்கள்.
ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 லட்சம் பொலிவார்கள். நம் நாட்டின் ஒரு ரூபாய், 3546 பொலிவார்களுக்குச் சமம். அதேவேளையில், 2 லட்சத்து 48 ஆயிரத்து 520 பொலிவார்கள் கொடுத்தால்தான் ஓர் அமெரிக்க டாலர் கிடைக்கும். வெனிசூலாவின் புதிய பணம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதுசார்ந்து நிலவும் குழப்பங்கள், கவலைகள் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைக்கத் தொடங்கியுள்ளனர்.
வியட்நாம்
உயர் பணவீக்கம் தெற்காசியா நாடான வியட்நாமை மிக மோசமாக பாதித்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு, 23,333.50 வியட்நாமிஸ் டோங் பணத்திற்கு இணையானது. இந்த மதிப்பு கடந்த 1980ல் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.05ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பிற்கு காரணம், 80களில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து பணத்தை மதிப்பிழக்கச் செய்து வந்ததே ஆகும்.
தெற்கு சூடான்
எண்ணெய் வளம் அதிகம் கொண்ட தெற்கு சூடானில் உள்நாட்டு போர் காரணமாக உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகரித்தது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்த காரணத்தால் அந்நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு சென்றது. 50 சதவிகித மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர்.
ஜிம்பாப்வே
ஒரு அமெரிக்க டாலருக்கு 35 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் என்ற மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. பணவீக்கம் விகிதம் 250,00,000 சதவிகிதம் என்ற அளவிற்கு உச்சத்தைத் தொட்டது. இதனால் 100 ஜிம்பாப்வே டிரில்லியன் டாலர் நோட்டை அச்சடிக்க முடிவை கையிலெடுத்து பின்னர் 2009ல் கைவிட்டது.
நைஜீரியா
ஆள்பவர்களின் எண்ணெய் விலை குறித்த முடிவால், அரசிற்கு குறைவான வருவாயே கிடைக்கும் சூழல் உருவானது. கடந்த செப்டம்பர் 2015ல் ஒரு நைராவிற்கு 197 அமெரிக்க டாலர் என்ற மிக மோசமான நிலைக்கு சென்றது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சோமாலியா
சோமாலியா நாட்டின் பணம், அதன் எல்லைகளுக்கு வெளியே சட்டப்பூர்வ ஒன்றாக கருதப்படுவது இல்லை. சாதாரணமாக பணப்பரிமாற்றங்கள் என்பது பெட்டிகளில், தள்ளு வண்டிகளிலும் செய்யப்படுகின்றன. இந்நாட்டில் அதிகபட்சமாக 5,000 ஷில்லிங் நாணயம் இருக்கிறது. இது ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக மிகக்குறைவான மதிப்பைக் கொண்டுள்ளது.