சுண்டக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணம் - அந்த கதையால்ல இருக்கு
புதிய ரூபாய் நோட்டுகளை விமானம் மூலம் எடுத்துச் செல்ல ரூ.29.41 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் எடுத்துச்செல்வதற்கு இந்தியா விமான படையின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்காக ரூ.29.41 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.50 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. நாடுமுழுவதும் திடீரென பணத்தட்டுபாடு ஏற்பட்டது. ஏடிஎம் வாசலிலும், வங்கி வாசலிலும் மக்கள் வரிசையில் நின்றனர்.
இதையடுத்து நாட்டில் பணத்தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசின் அச்சகத்தில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் புதியதாக அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் அவசர சேவைக்குப் பயன்படுத்தப்பட்டன.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் புதிய கரன்சிகளை கொண்டு செல்ல விமானப்படை விமானங்கள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டன, அதற்காக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என விமானப்படைக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட தகவல் அடிப்படையில் சி 17 மற்றும் சி 130J சூப்பர் ஹெர்குலஸ் ஆகிய இந்திய விமானப்படை விமானங்கள் நாடு முழுவதும் 91 முறை பண விநியோக சேவையை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. அதற்கான 29 கோடியே 41 லட்சம் கட்டண ரசீதை அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவைகளுக்காக கரன்சி நோட்டுகளை அச்சிடும் செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேஷனிடம் ரூ.29.41 கோடிக்கு ரசீது வழங்கப்பட்டு பணம் பெறப்பட்டது என தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு ஏறக்குறைய 99 சதவீதத்துக்கும் செல்லாத நோட்டுகள் வந்துவிட்டதாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடி நோட்டுகள் வங்கிக்குள் வந்துவிட்டன. செல்லாத நோட்டுகளான 500, 1000 ரூபாய்கள் மிகவும் துல்லியமாக எண்ணப்படும் நவீன எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றது. எண்ணி முடிக்கப்பட்ட நோட்டுகள் நவீன எந்திரங்கள் மூலம் மிகச்சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி பல்வேறு ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் நடந்து வருகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.