இந்தியா உள்ளிட்ட 4 பகுதிகளில் 15000 பேரை பணி நீக்கம் செய்கிறது ஐபிஎம்!
டெல்லி: ஐ.பி.எம். நிறுவனம் தனது ஊழியர்கள் 15 ஆயிரம் பேரை பணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது நிறுவனத்தை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேரை பணி நீக்கம் செய்கிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என தெரிகிறது.
இது குறித்து அந்நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரான லீ கான்ராட் கூறுகையில், "15 ஆயிரம் ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இது முதல் கட்டம்தான். விரைவில் மற்ற நடவடிக்கைகள் குறித்து அறிவிப்போம்," என தெரிவித்தார்.
ஐபிஎம் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அந்நிறுவனத்தின் இந்த முடிவால், இந்தியாவில்தான் பெரிய அளவு பாதிப்பை ஏற்படும் என தெரிகிறது.