ஐ.டி.பி.ஐ வங்கி ஊழியர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு ஸ்டிரைக்!
மும்பை: மத்திய அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.டி.பி.ஐ வங்கி இன்று முதல் 4 நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தினை அறிவித்துள்ளது.
ஐ.டி.பி.ஐ. வங்கியில் தனது பங்கை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளதை கண்டித்து அந்த வங்கியின் ஊழியர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மும்பையில் ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க நிர்வாகி கூறுகையில், "மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதுதொடர்பாக 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தபோராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வேலைநிறுத்தத்தை கைவிட வலியுறுத்தி தொடர்ந்து பேசி வருகிறோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில வங்கி கிளைகளை திறப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.