இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக உயரும் - ஐஎம்எஃப் கணிப்பு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுப்பெற்று வருகிறது என்று 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாக உயரும் எனவும் ஐஎம்எஃப் கணித்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7.3 சதவிகிதமாகவும் 2019ஆம் ஆண்டு 7.4 சதவிகிதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் மதிப்பிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் திவால் சட்டம் போன்றவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் எனவும் ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பானது கடைசியாக ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டை (7.5%) விடக் குறைவுதான். கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கான தனது மதிப்பீட்டை சற்று குறைத்துள்ளதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
ஐஎம்எஃப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் சற்று பின் தங்கி இருந்தாலும், அந்நாட்டுடன் போட்டியிட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட இந்திய பொருளாதார வளர்ச்சியானது நடப்பாண்டில் 0.7 சதவீதமும், 2019ஆம் ஆண்டில் 1.2 சதவிகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, 2017ஆம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 7.3 சதவிகிதமாகவும், 2019ஆம் ஆண்டில் 7.4 சதவிகிதமாக இருக்கும்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரித்திட்டம் அமல்படுத்தப்பட்டதால் வரிவருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி, முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுவாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதுபோலவே சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் மூலம் வாராக்கடன்களை வேகமாக வசூல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதே வேகம் தொடர்ந்தால், உலகில், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். அதேசமயம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சீனாவின் வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்திருந்தது. சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தகத் தடைகளால்தான் சீனாவுக்கு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காவது மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தன்னை முன்னிறுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி சில தினங்களுக்கு முன்பு இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்று கூறியிருந்தார். ஐஎம்எஃப் மதிப்பீடும் அதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
உலக வங்கி கணிப்பு
இதனிடையே தெற்காசிய மண்டலம் குறித்த உலக வங்கியின் அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் இதற்கு முன்பு பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்டிருந்த தற்காலிகமான இடையூறுகளிலிருந்து மீண்டெழுந்துவிட்டது போலத் தெரிவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும், உள்நாட்டில் உள்ள அபாயங்களாலும், சர்வதேசச் சூழல் சாதகமாக இல்லாததாலும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு 2017-18ஆம் நிதியாண்டில் 6.7 விழுக்காடு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. உலக வங்கியின் இந்த அறிக்கையில், 'ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், வங்கிகளுக்கு மறு மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வலுப்பெற்று வருகிறது. வளர்ச்சிப் பாதையில் இந்தியா மேலும் நகர்ந்து செல்லும் என்று தெரிவித்துள்ளது.
2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாக உயரும் எனவும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் 7.5 சதவிகிதம் அளவுக்கு உயரும் எனவும் உலக வங்கி எதிர்பார்க்கிறது. இந்த வளர்ச்சிக்கு வலுவான தனியார் செலவினம், ஏற்றுமதி வளர்ச்சி போன்றவை முக்கியக் காரணிகளாக அமையும் எனவும் கூறுகிறது.