6.92 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் - ரூ.10.03 லட்சம் கோடி வரி வசூல்
கடந்த நிதியாண்டில் வருமான வரி ரூ. 10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கடந்த 2017-18 ஆம் வரி மதிப்பீட்டு ஆண்டில் நாட்டின் வருமான வரி வசூல் ரூ.10.03 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 6.92 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வருமான வரித்துறை சார்பில் கவுஹாத்தியில் நடந்த கருத்தரங்கில், மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் ஷாப்ரி பட்டசாலி பேசுகையில், '' கடந்த 2017-18 நிதியாண்டில் 6.92 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ரூ.10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் புதிதாக 1.06 கோடி பேரை வரி வரம்புக்குள் கொண்டு வந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மேலும் 1.25 கோடி பேரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
வருமானவரித்துறையின் வடகிழக்கு மண்டல முதன்மை ஆணையர் எல்.சி.ஜோஷி ராணி கூறுகையில், ''வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் ரூ.7,097 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வருமான வரி வசூல் இலக்கை எட்ட உறுதி பூண்டுள்ளது. இதற்காக ஆயகர் சேவை மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. இது வருமான வரி செலுத்துவோருக்கு சேவை அளிக்கவும் உதவும் என்றார்.
வருமானவரி செலுத்துவோர் வரம்பை அதிகரிக்கவும், வரிவசூல் இலக்கை உயர்த்தவும், வரி செலுத்துவோருக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கவும் வருமானவரித்துறை உறுதி பூண்டுள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2017-18 நிதியாண்டில் மொத்தம் 6.92 கோடி வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது 2017-18 நிதியாண்டை விட 1.31 கோடி அதிகமாகும். அந்த ஆண்டில் மொத்தம் 5.61 கோடி ரிட்டன்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, 2017-18ஆம் ஆண்டில் புதிதாக 1.06 கோடிப் பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் 1.25 கோடிப் பேரை இதில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் புதிதாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 1.89 லட்சம் ஆகும்.
மொத்தம் ரூ.10.03 லட்சம் கோடியை வருமான வரியாக மத்திய அரசு வசூலித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட வருமான வரி ரிட்டன் தொகையின் மதிப்பு ரூ.7,097 கோடியாகும். இது இதற்கு முந்தைய ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.6,082 கோடியைவிட 16.7 சதவிகிதம் அதிகமாகும்.