வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்டு இனி ஒரே நாளில் கிடைக்கும் - மத்திய அரசு புது திட்டம்
வருமான வரி தாக்கல் தாக்கல் செய்தால் ரீஃபண்டு பெற மாதக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. அடுத்த ஆண்டு முதல் ஒரே நாளில் உங்கள் கணக்கில் வந்து விடும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
டெல்லி: வருமான வரி தாக்கல் செய்த பின்பு ரீஃபண்டிற்காக இனிமேல் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே உங்கள் கணக்கிற்கு வந்துவிடும் வகையில் புதிய மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 4,241 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமான வரி ரிட்டன்களை ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும். அதேபோல், நிறுவனங்களும் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட (Audit Report) தணிக்கை அறிக்கை மற்றும் வருமான கணக்கையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
வருமான வரி ரிட்டன்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூலை மற்றும் செப்டம்பர்) தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதத்துடன் அடுத்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். வருமானத்திற்கான கூடுதல் வரி ஏதேனும் செலுத்தவேண்டியது இருந்தால் வரிக்கான வட்டியையும் கூடவே செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
வருமான வரி ரீபண்ட்
மாதச்சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவினரும், நிறுவனங்களும், தங்கள் வருமானத்திற்கு உரிய வரியை விட கூடுதலான வரியை செலுத்தி இருந்தால் உபரி வரியை (Refund) வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும். சில நேரங்களில் 5 மாதம் வரையிலும் கால தாமதம் ஏற்படுவதுண்டு.
வருமான வரி தாக்கல் எளிமை
கால தாமதம் ஏற்பட முக்கிய காரணமே, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணைய தளமும் (e-filing portal), வரி செலுத்த உதவும் இணையதளமும் (Centalized processing centre) வேறு வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதே ஆகும். தற்போது இ-ஃபைலிங் இணைய தளத்தை டிசிஎஸ் (TCS) நிறுவனமும், சிபிசி(CPC) இணையதளத்தை இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனமும் தனித்தனியே நிர்வகிப்பதே கால தாமதம் மற்றும் உபரி வரிக்கான கூடுதல் வட்டியையும் மத்திய வருமான வரி ஆணையம் இழப்பதற்கு காரணமாகும்.
ஒரே இணையதளம்
இனிமேல் உபரி வரியை (Refund) பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிநபர் பிரிவினரும், மாதச் சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே தங்களின் உபரி வரியை பெற்றுக்கொள்ள முடியும். வரி தாக்கல் செய்யும் இணையதளத்தையும் வரி செலுத்தும் இணையதளத்தையும் இனிமேல் இன்ஃபோசிஸ் நிறுவனமே நிர்வகிக்கப்போகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமையன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம்
கடந்த ஆண்டு இறுதியில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா, பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தல் மற்றும் ரீஃபண்டு நடைமுறைகள் எளிமையான நடைமுறைகளாக மாறப்போகின்றன. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதற்காக சுமார் 4,241 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
புதிய இணையதளம்
மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டுதோறும் வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணையதளத்தை மேம்படுத்தி வருகின்றது. தற்போது எடுத்துள்ள முயற்சியும் பாராட்டப்படவேண்டிய நல்ல தொடக்கமாகும். ஆனாலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது அதனுடைய உண்மையான பலன் வரி செலுத்துவோருக்கு கிட்டும். அதில்தான் மத்திய வரிகள் வாரியத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது என்று டிலோயிட் (Deloitte) நிறுவனத்தின் பங்குதாரர் நீரு அகுஜா கூறினார்.
ஒரே நாளில் ரீபண்ட்
மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்பு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், முன்னதாக வருமான வரி செலுத்துவோர், வரி செலுத்துவதற்கும், உபரி வரியை திரும்ப பெறுவதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருந்தது. வருமான வரிகள் வாரியமும் கூடுதல் தொகையை செலுத்தவேண்டியுள்ளது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முயற்சியால் கால விரயமும் பண விரயமும் முற்றிலும் தவிர்க்கப்படும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும், என்றார்.
இன்போசிஸ் நிறுவனத்திற்கு
வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தையும்(ITR Portal) வரி செலுத்தும் இணையதளத்தையும் (CPC) மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களும் விண்ணப்பித்து இருந்தன. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனமே குறைந்த தொகைக்கு கேட்டிருந்ததால், இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனம் வருமான வரி இணையதளத்தை மேம்படுத்த சுமார் 18 மாத காலம் எடுத்துக்கொள்ளும் என்றும் மத்திய அமைச்சர் கோயல் தெரிவித்துள்ளார்.