வருமான வரித்தாக்கலுக்கான காலக்கெடு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி: வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு தேதியை வரும் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து வரும் அக்டோபர் 31 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
2016-17ம் ஆண்டுக்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரித்தாக்கலுக்கான கடைசி நாள் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாத காலம் காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையினர் நெருக்கடி
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர்.
ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்
கூடவே, ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் செப்டம்பர் 20ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கான படிவங்களை தாக்கல் செய்வதற்கான முஸ்தீபுகளில் அனைத்து தொழில் துறையினரும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி
மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மேற்கொண்ட கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர் 2 , ஜிஎஸ்டிஆர் 1 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 ஆகிய படிவங்களை தயார் செய்து அதையும் வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
இதனால், அனைத்து தொழில் நிறுவனங்களும், வரி ஆலோசகர்களும் தணிக்கையாளர்களும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என்று அலைந்து கொண்டிருப்பதால், வருமான வரித்தாக்கல் செய்யவேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர்.
வருமான வரி தாக்கல்
எனவே, செப்டம்பர் 20ம் தேதிக்குள் அனைத்து ஜிஎஸ்டிஆர் படிவங்களை எல்லாம் தாக்கல் செய்துவிட்டு, மறுபடியும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அனைத்து விபரங்களையும் படிவங்களையும் தயார் செய்து தாக்கல் செய்வது என்பது முடியாத செயல் என்பது அனைவரும் அறிந்ததே.
அக்டோபர் 31 கடைசி நாள்
இதனை மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board of Direct Taxes) தெளிவாக உணர்ந்துள்ள காரணத்தினால், தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.