2018-19ல் 5.42 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் - நடப்பாண்டு 71% அதிகரிப்பு
இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
டெல்லி: வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 5.42 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி ரிட்டன்களை வரி செலுத்துவோர் தாக்கல் செய்துள்ளதாக வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, கடந்த ஜூலை 31ஆம் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் கால அவகாசமும் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் மூலமாக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 3.17 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5.42 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட 60 சதவிகிதம் கூடுதலாகும். நடப்பு நிதியாண்டில் சரியாக 5,29,66,509 வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று மட்டும் இரவு 7 மணி வரையில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நள்ளிரவு வரை ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டதாலும், கேரள மக்களிடமிருந்து வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாலும், ரிட்டன்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்.