ஐ.பி.எல். போட்டிகளில் ஈடுபட தடை எதிரொலி: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் பலத்த சரிவு
மும்பை: ஐ.பி.எல். போட்டிகளில் ஈடுபட இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்குகள் பலத்த சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் 5% சரிவு கண்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது குற்றம்சாட்டப்பட்டன. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய நீதிபதி லோதா தலைமையிலான குழு இன்று ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் ஈடுபட்டோருக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.
சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது; சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை எதிரொலியால் பங்குச் சந்தைகளில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பலத்த சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 5% அளவுக்கு சரிவை எதிர்கொண்டது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.