ஐ.பி.எல். மூலம் ரூ.166 கோடி வருமானம்... சிமெண்ட் விற்பனையால் நஷ்டம்: என்.சீனிவாசன்
சென்னை: சிமெண்ட் விற்பனை மூலம் ரூ.35.85 கோடி நஷ்டத்தையும், ஐ.பி.எல். கிரிக்கெட் மூலம் ரூ.166 கோடி வருமானத்தையும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக அதன் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘இந்தியா சிமெண்ட்ஸ்' அலுவலகத்தில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘தி இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவனத்தின் 4-வது காலாண்டு மற்றும் ஓராண்டு (2013-14) முடிவுகள் குறித்து அவர் தகவல்களை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
லாபம் குறைவு...
சிமெண்ட் விற்பனை சரிவு மற்றும் கம்பெனி ஒரு கப்பலை விற்றதால் 4-வது காலாண்டில் ரூ.31 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை கட்டுமான துறைகளையும் பெரிதும் பாதித்துள்ளது. சிமெண்ட் துறையை பொறுத்தவரையில் அதிக கொள்ளளவும், குறைந்த தேவையும், விலையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி லாபத்தை குறைத்துவிட்டது.
ரூ.35.85 கோடி நஷ்டம்...
கடந்த ஆண்டு (2012-13) 27.63 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த வருடம் (2013-14) சிமெண்ட் தயாரிக்க உபயோகிக்கப்படும் பல பொருட்களின் விலை குறிப்பாக ரெயில்வே சரக்கு கட்டணம், மின்சாரம், அன்னிய செலாவணி, பெட்ரோலிய பொருட்களின் மாதாந்திர உயர்வு ஆகிய காரணங்களால் இந்த காலாண்டில் 11 சதவீதம் உற்பத்தி குறைந்து 24.65 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.
விற்பனை குறைவு...
கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.4,616 கோடிக்கு சிமெண்ட் விற்பனை நடந்தது. தற்போது (2013-14) ரூ.4,498 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய சிமெண்ட் நிறுவனம் ரூ.164 கோடி லாபம் ஈட்டியது. பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகித உயர்வு மற்றும் மேற்கூறிய காரணங்களினால் இந்த ஆண்டு கம்பெனி ரூ.35.85 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் இந்த வருடம் (2013-14) ரூ.166 கோடி இந்திய சிமெண்ட் நிறுவனத்துக்கு வருமானமாக கிடைத்துள்ளது.
எதிர்பார்ப்பு...
மத்தியில் அமைந்துள்ள நிலையான அரசு, விரைவான வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க இருப்பதால் பொருளாதார வளர்ச்சி பெரும் என்றும், இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014-15-ம் ஆண்டில் 5.4 முதல் 5.7 சதவீதம் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி பெறும்...
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதால், அந்த பகுதியில் பொருளாதாரம் வளர்ச்சியடைவதோடு கட்டுமானத்துறையும் பெருமளவு வளர்ச்சி பெறும். இது சிமெண்ட் துறை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.