இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் - சென்னை நிலத்தடி நீர் வற்றி விடும்: நிதி ஆயோக் எச்சரிக்கை
இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2020ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் எச்சரித்துள்ளது.
இந்தியா இதுவரை இல்லாத அளவு மிக மோசமான தண்ணீர் பிரச்சினையை சந்தித்து கொண்டிருப்பதாகவும், இதனால், 2030ஆம் ஆண்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. பெங்களூரு மட்டுமின்றி 2020ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் எனவும் எச்சரித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தை போலவே விரைவில் பெங்களூருவும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போகிறது என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நாடுமுழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக நிதி ஆயோக் விரிவான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியிட்டு எச்சரிக்கை மணியடித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை
நாடுமுழுவதும் 60 கோடி மக்கள் தினந்தோறும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பான நீர் கிடைக்கப் பெறாததால், 2 லட்சம் பேர் ஆண்டு தோறும் உயிரிழந்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.
மோசமான தண்ணீர் பிரச்சினை
2020ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். பெங்களூரு மட்டுமின்றி டெல்லி, சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் மோசமான தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நகரங்களில் 2020ம் ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் மறைந்து விடும்.
உள்நாட்டு உற்பத்தி சரியும்
இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாட்டின் ஜிடிபி என அழைக்கப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் 6% சதவீதம் அளவிற்கு சரியும்.
தானிய உற்பத்தி பாதிப்பு
இந்தியாவில் நமது மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரில் 70 சதவீதம் மிக மோசமாக மாசடைந்துள்ளது. 40 சதவீத தண்ணீர் பயன்படுத்த தகுதி இல்லாத நிலையில் உள்ளது. தண்ணீர் பிரச்சினையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இதனால் நாட்டில் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்குவதே கூட கேள்விக்குரியாகும் சூழல் உள்ளது.
மோசமான நீர் மேலாண்மை
பல மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு மழை பெய்துள்ள போதிலும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டதற்கு தண்ணீர் மேலாண்மை சரியாக இல்லாததே காரணம். குறிப்பாக குளம், குட்டை, வாய்க்கால், பாசன ஏரிகள் என எதையும் தூர் வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தண்ணீர் பிரச்சினையை சரியான முறையில் கையாளும் மாநிலங்களில் தமிழகம் உட்பட 60 சதவீத மாநிலங்கள் மிக மோசமான முறையிலேயே கையாண்டு வருகின்றன. ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் மிக மோசமாக தண்ணீர் பிரச்சினையை கையாண்டு வருகின்றன.
நீர் மேலாண்மை டாப்
பொதுவான தண்ணீரை சரியான முறையில் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு உள்ளன. ஆனால் சரியான முறையில் இது செயல்படவில்லை. இதுமட்டுமின்றி, இந்தியாவில் 24 மாநிலங்களில் தண்ணீரை எந்த அளவிற்கு சரியாக பயன்படுத்துகின்றன எனவும் நிதி ஆயோக் ஆய்வு செய்துள்ளது. குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மிகச்சிறந்த தண்ணீர் நிர்வாக பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. அதேசமயம் ஜார்கண்ட், பீகார், ஹரியாணா மாநிலங்களிலும் ஒரளவு தண்ணீர் மேலாண்மை உள்ளது என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் பேர் மரணம்
தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருகின்றனர். 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தியாவில் 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமானதாக மாறி வருகிறது. தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா 120 இடத்தில் உள்ளது. நாட்டில் 52 சதவீத நிலப்பரப்பு வேளாண் பகுதிகளாக இருப்பதால் மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர். நீர்ப்பாசன திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தண்ணீர் முக்கியத்துவம்
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ளது. ஆனால் இதன் முக்கியத்துவம் பலருக்கும் தெரியிவில்லை. இதை நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டின் சில பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத இடங்களாக மாறி விடும் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.