2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 % ஆக அதிகரிக்கும்: உலக வங்கி தகவல்
2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 % ஆக அதிகரிக்கும் என்று உலக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : 2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 % ஆக அதிகரிக்கும் என்றும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு சரியான பாதையை நோக்கி செல்வதாகவும் உலக வங்கி தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவற்றால் சற்று நிலை தடுமாறினாலும் இறுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதாக உலக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவை விட அதிகமாக இருக்கும். இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று உலக வங்கியின் வளர்சிக்கான திட்டக்குழு இயக்குநர் அயான் கோஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
வளரும் பொருளாதாரம்
மேலும், மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சீனாவின் வளர்ச்சி வரும் ஆண்டுகள் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். வரும் 2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 %, 2019-20ம் நிதியாண்டில் 7.5 % இருக்கும் என்று உலக வங்கி கணக்கிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி.,யும்
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி பிரச்னையால் முதல் காலாண்டில் குறைந்து இருந்த வளர்ச்சி விகிதம், அடுத்தடுத்த பொருளாதார ஸ்திரதன்மையால் இந்த ஆண்டு இறுதியில் அதிகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.பொருளாதாரத்தில் அனைவரையும் அச்சுறுத்தி வந்த சீனா இந்த ஆண்டில் 6.8 % மட்டுமே எட்டு இருப்பதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விகிதம் குறையும் என்றும் அயான் கோஸ் குறிப்பிட்டு உள்ளார்.
தடுமாற்றங்களை சமாளித்து முன்னேற்றம்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் முதலில் சிறிய தடுமாற்றங்களை ஏற்படுத்தினாலும் வளர்ச்சியில் அவை குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்தியா முழுவதும் ஒரே வரி அறிமுகப்படுத்தப்பட்டது மிகவும் பாரட்டப்பட வேண்டிய ஒன்று என்று அவர் தெரிவித்து உள்ளார். மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார சிக்கல்கள்
ஜி.எஸ்.டி வரி விதிப்பும், வங்கிகளுக்கு முதலீட்டை அதிகப்படுத்தியதும் இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனை. இந்திய அரசு பொருளாதார சிக்கல்களை தொலைநோக்கு பார்வையில் அணுகி வருவதால் தான் இதுபோன்ற நடவடிக்கைகள் சாத்தியமாக்கப்பட்டு உள்ளது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்தியா போன்ற வளர்ந்து வரும் பெரு நாடுகளுக்கு இவை மிகவும் அவசியமான ஒன்று.
பெண்களுக்கு முக்கியத்துவம்
இன்னமும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு, தனியார் முதலீட்டை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் அரசு கவனம் செலுத்தினால் எதிர்பார்த்ததை விட விரைவில் இந்தியாவால் இலக்கை எட்டமுடியும் என்றும், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த வளர்ச்சி ஏழு சதவிகிதமாக இருக்கும் என்றும் அயான் கோஸ் குறிப்பிட்டு உள்ளார்.